Actress Rekha: விஜயகாந்த் திருமணம்.. உருக்கத்துடன் நினைவுகூர்ந்த நடிகை ரேகா!
சென்னை: நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமான நிலையில் இன்றைய தினம் அவரது 16வது நாள் காரியம் நடைபெற்றது. விஜய்காந்த் மறைவையொட்டி எராளமான பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க முடியாதவர்கள், அடுத்தடுத்த தினங்களில் அவரது சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் விஜயகாந்த்துடன் தொடர்ந்து 6 படங்களில் நடித்துள்ள நடிகை ரேகா இன்றைய தினம் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், மக்கள் ஆணையிட்டால் என 6 படங்களில் விஜயகாந்துடன் இணைந்து நடித்துள்ளார் ரேகா. இவர்களது ஜோடி, ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது. குறிப்பாக என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் படத்தில் அடாவடியாக நடித்திருப்பார் ரேகா. அந்தப் படத்தில் விஜயகாந்தின் அமைதியான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது விஜயகாந்த் சமாதியில் ரேகா நேரில் வந்து தன்னுடைய அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

விஜயகாந்த் மறைவு: விஜயகாந்த் சமாதியில் கற்பூர ஆரத்தி காட்டி அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரேகா, அவருடன் இணைந்து நடித்தபோது அவரது பலத்தை, அவருக்காக கூடிய கூட்டத்தை பார்த்து தான் தெரிந்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். அந்த அளவிற்கு அவர் பவர்ஃபுல்லாக இருந்ததாகவும் அனைவருக்கும் பாதுகாப்பை அளித்ததாக உருக்கம் தெரிவித்துள்ளார். சின்ன ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் முதல் அனைவருக்கும் அவர் பாதுகாப்பாக இருந்ததாகவும் ரேகா தெரிவித்துள்ளார். கேப்டன் என்ற சொல் விஜயகாந்திற்குதான் சிறப்பாக பொருந்தும் என்றும் கூறியுள்ளார்.
ரேகா அஞ்சலி: விஜயகாந்த் திருமணத்தில் தான் கலந்துக் கொண்டதாகவும் அதில் அதிகப்படியான கூட்டத்தில் சிக்கி தான் திணறியபோது காரில் வந்த அவர், தன்னை காரில் ஏற்றி, பிரேமலதா மடியில் அமரவைத்து வெளியில் சென்று விட்டார் என்றும் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ரேகா. அவரது திருமணத்தில் கலந்துக் கொண்ட தனக்கு இறுதியாக அவரது முகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்த ரேகா, 20 நாட்கள் மிகப்பெரிய படத்தின் சூட்டிங்கில் தான் பங்கேற்றதாகவும் தன்னால் சூட்டிங் பாதிக்கப்பட கூடாது என்பதால் தன்னால் அதிலிருந்து வர முடியவில்லை என்றும் ரேகா கூறியுள்ளார்.

மிகப்பெரிய வலி: அவர் மேலிருந்து அனைவரையும் வழிநடத்துவார் என்றும் ரேகா நம்பிக்கை தெரிவித்துள்ளார். சில விஷயங்கள் தவறிப்போகும் போது மிகப்பெரிய வலி ஏற்படும் என்றும் அந்த வகையில் விஜயகாந்தின் மரணம் தாங்க முடியாத வேதனையை கொடுத்ததாகவும் ரேகா கூறியுள்ளார். தான் தன்னுடைய தந்தையின் மறைவிற்கு பிறகு அழுததில்லை என்றும் ஆனால் விஜயகாந்தின் மறைவின்போது அவரது மகன்கள் அழுததை வீடியோவில் பார்த்ததாகவும் தான் இதையடுத்து அதிகமாக கண்ணீர் விட்டதாகவும் ரேகா கூறியுள்ளார். அதை பார்க்கும்போது அவர்கள் அவரை எந்த அளவிற்கு மிஸ் செய்திருப்பார்கள் என்பதை உணர முடிந்ததாகவும் ரேகா குறிப்பிட்டுள்ளார்.
மிகச்சிறந்த தலைவர்: நடிகர் சங்கத்திற்கு தலைவராகவும் கேப்டனாகவும் நின்று நிறைய விஷயங்களை விஜயகாந்த் செய்துள்ளதாகவும் புதிதாக துவங்கப்பட உள்ள நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என்றும் ரேகா கேட்டுக் கொண்டார். கண்டிப்பாக இது நடக்கும் என்று தான் நம்புவதாகவும் ரேகா குறிப்பிட்டார். புதிதாக துவங்கப்படவுள்ள நடிகர் சங்கம் எப்படி நடக்கும் என்பது குறித்து தெரியவில்லை என்றும் ஆனால் விஜயகாந்த் இருந்தவரை அது சிறப்பாக செயல்பட்டதாகவும் ரேகா கூறினார். இனி அவர் போல ஒரு தலைவர் கிடைப்பாரா என்பதும் சந்தேகமாக உள்ளதாகவும் அவரது ஆத்மா சாந்தியடைய தான் வேண்டிக் கொள்வதாகவும் ரேகா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











