பாலியல் வன்கொடுமை.. நானே நேரடியாக தண்டனை கொடுப்பேன் - ரித்திகா சிங் அதிரடி
சென்னை: பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு நானே நேரடியாக சென்று தண்டனை கொடுப்பேன் என நடிகை ரித்திகா சிங் தெரிவித்திருக்கிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் உருவான படம் இறுதிச்சுற்று. கடந்த 2016ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. இதில் ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்தார். இதுதான் அவரது முதல் படம் ஆகும். அறிமுகமான படத்திலேயே தனது நடிப்பின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் ரித்திகா சிங்.

முதல் படத்திலேயே தேசிய விருது
நிஜத்தில் குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் இறுதிச்சுற்று திரைப்படத்திலும் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்தார். இதனால் அந்தக் கதாபாத்திரமாக மாறுவது அவருக்கு வெகு இயல்பாகவே அமைந்துவிட்டது. குத்துச்சண்டை வீராங்கனையாக மட்டுமின்றி பாடல்களில் நடனமும் சிறப்பாக ஆடினார். இதனால் கோலிவுட்டில் மிகச்சிறந்த எதிர்காலம் ரித்திகாவுக்கு இருப்பதாக பலர் கூறினர். மேலும், இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார்.

ரித்திகா சிங்கின் புதிய படம்
அதனைத் தொடர்ந்து சினிமாவில் சில படங்களில் நடித்த ரித்திகா சிங் தற்போது இன் கார் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி படத்தை தயாரிக்க. ஹர்ஷ்வர்தன் படத்தை இயக்கியிருக்கிறார். கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்ணின் வலியை, அவரது பார்வையில் அந்தக் கடத்தல் சம்பவம் வாயிலாகவே சொல்லப்படும் படமாக இது உருவாகியிருக்கிறது.

4 மொழிகளில் வெளியாகும் இன் கார்
முதல் படத்திலேயே நடிப்பில் மிரட்டிய ரித்திகா சிங் சிறந்த கதையம்சம் உள்ள இன் காரில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படமானது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகிறது. தமிழில் ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா படத்தை வெளியிடுகிறார். படமானது மார்ச் 3ஆம் தேதி வெளியாகிறது.

இன் கார் படம் பெரும் சவாலாக இருந்தது
இந்நிலையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய ரித்திகா சிங், இன் கார்" படம் எனக்கு மிகப்பெரும் சவாலானதாக இருந்தது. ஒரு கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எத்தனை மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள், அவள் துன்பத்தின் எந்த எல்லை வரை செல்கிறாள், என்பதை நுணுக்கமாக இந்தப்படம் சொல்லும்.

நேரடியாக தண்டனை கொடுப்பேன்
இந்தப் படத்தில் நடித்த பிறகு என்னால் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியில் வர முடியவில்லை. எனக்குள் பெரும் பாதிப்பை "இன் கார்" படம் ஏற்படுத்தியது. இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் ஹர்ஷ் வர்தனுக்க்கு நன்றி. இந்தப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேருங்கள்" என்றார்.
அதன் பிறகு அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்பவருக்கு நீங்கள் என்ன தண்டனை கொடுப்பீர்கள் என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த ரித்திகா, "பாலியல் வன்கொடுமை செய்பவருக்கு நானே நேரடியாக சென்று தண்டனை கொடுப்பேன்" என அதிரடியாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











