அண்ணன் மீது நடிகை ரோஜா கொலை மிரட்டல் புகார்!
சென்னை: நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா, தனது அண்ணன் மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார்.
தொன்னூறுகளில் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்தவர் நடிகை ரோஜா. 2002-ம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தமிழ் சினிமாவில் அண்ணி, அம்மா, வில்லி வேடங்களில் நடித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் அதனால் ஆந்திர அரசியலிலும் தீவிரமாக களமிறங்கி, பல கட்சிகள் தாவி, இப்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாக உள்ளார்.

இந்நிலையில், ரோஜா அனந்தபூர் மாவட்டம் ராயதுர்கம் போலிசீல் நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், "என்னுடைய அண்ணனும் ரியல் எஸ்டேட் அதிபருமான ராம்பிரசாத் ரெட்டியும், தனது மேனேஜர் பிரசாத் ராஜூம் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி என்னிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர்.
நான் சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை இருவரும் பறித்துக் கொண்டதால், இப்போது தொலைக்காட்சியில் நடித்து சம்பாதித்து வருகிறேன். என்னுடைய அண்ணனின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக அவருடன் நான் பேசுவதில்லை.
இந்நிலையில், கடந்த 3-ந் தேதி இருவரும் என்னிடம் வந்து உன் சொத்தை எங்களுடைய பெயருக்கு மாற்றி எழுதி தரவேண்டும். இல்லையென்றால், உன்னை ஒழித்து விடுவோம் என மிரட்டி விட்டுச்சென்றனர். ஆகையால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என கூறியுள்ளார்.
இந்த புகாரின் பேரில் ராயதுர்கம் போலீஸார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











