சமந்தா போனால் என்ன சாய் பல்லவி இருக்கிறார்.. புஷ்பா 2வில் மலர் டீச்சர் என்ட்ரி?
ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா 2 படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் சாய் பல்லவி. தனியார் தொலைக்காட்சி நடத்திய நடன போட்டியில் பங்கேற்று தோல்வியடைந்தவர் மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

தமிழ், தெலுங்கில் முன்னணியில் சாய் பல்லவி
அதனைத் தொடர்ந்து தமிழிலும் நடிக்க ஆரம்பித்த சாய் பல்லவி மாரி 2, என்.ஜி.கே, கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதில் கார்கி திரைப்படம் மெகா ஹிட்டானது. அதில் சாய் பல்லவியின் கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டது. இதனையடுத்து தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்த சாய் பல்லவி நானியுடன் ஷ்யாம் சிங்கா ராய் உள்ளிட்ட படங்களில் நடித்து அங்கும் முன்னணி கதாநாயகியாக வலம்வர ஆரம்பித்திருக்கிறார்.

எதிர்பார்ப்புடன் உருவாகும் புஷ்பா 2
இதற்கிடையே சுகுமார் இயக்கத்தில் உருவாகி மெகா ஹிட்டான படம் புஷ்பா. பான் இந்தியா அளவில் வெளியாகி 500 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் ஹிட்டான படம் என்ற பெயரையும் புஷ்பா திரைப்படம் பெற்றது. அப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

புஷ்பா 2வுக்கு நோ சொன்ன சமந்தா
புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் சென்சேஷ்னல் ஹிட்டானது ஊ சொல்றியா மாமா பாடல்தான். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் சமந்தா அந்தப் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். இதனையடுத்து தற்போது உருவாகும் புஷ்பா 2 படத்திலும் அதேபோல் ஒரு நடனம் ஆடுவதற்கு சமந்தாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அதற்கு சமந்தா திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு முன்னணி கதாநாயகியிடம் படக்குழு தீவிர பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது.

புஷ்பா 2 திரைப்படத்தில் சாய் பல்லவி
இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் சாய் பல்லவி நடிக்க கமிட்டாகியிருக்கிறாராம். ஆனால் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு சாய் பல்லவி கமிட்டாகவில்லை எனவும், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக சாய் பல்லவி இருப்பார் எனவும், இதற்காக அவர் பத்து நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் திரையுலகில் பேச்சு எழுந்திருக்கிறது. புஷ்பா 2வில் கமிட்டாகியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தியால் சாய் பல்லவியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











