திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்.. பிரபல நடிகை பகீர் புகார்.. ஒளிப்பதிவாளர் அதிரடி கைது!
ஐதராபாத்: தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி விட்டார் என்று பிரபல நடிகை கொடுத்த புகாரை அடுத்து, ஒளிப்பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகை சாய் சுதா. நாக் அஸ்வின் இயக்கத்தில் நானி, விஜய் தேவரகொண்டா நடித்த யவடே சுப்ரமணியம் என்ற படத்தின் மூலம் பிரபல மடைந்தவர்.
விஜய் தேவரகொண்டா நடித்து தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' படத்தில், தோழியாக இவர் நடித்திருந்தார்.

சூப்பர் ஹிட் படங்கள்
மேலும் சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர், ஷியாம் கே.நாயுடு என்ற ஒளிப்பதிவாளரை காதலித்து வந்தார். ஷியாம் கே.நாயுடு, மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த டெம்பர், வெங்கடேஷ் நடித்த பாடிகார்ட், ராம்சரணின் சிறுத்தா, அல்லு அர்ஜுன் நடித்த ஜுலாயி உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

நெருங்கிப் பழகினார்
பிரபல தெலுங்கு ஒளிப்பதிவாளரான சோட்டே கே.நாயுடுவின் சகோதரர் இவர். யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் படங்களில் ஹீரோவாக நடித்த சந்தீப் கிஷனின் உறவினர். நடிகை சாய் சுதாவிடம், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு திருமணம் செய்வதாக வாக்குறுதிக் கொடுத்திருந்தாராம். இதையடுத்து அவரிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

அதிரடி புகார்
ஆனால், நடிகையிடம் வாக்குறுதி அளித்தபடி அவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நடிகை சாய் சுதா, ஐதராபாத்தில் உள்ள எஸ்.ஆர்.நகர் போலீஸ் ஸ்டேஷனில், ஷியாம் கே. நாயுடு மீது அதிரடியாக புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி, மோசடி செய்துவிட்டார் என்று புகாரில் கூறியிருந்தார்.

பரபரப்பு
இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், ஷியாம் கே நாயுடுவை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை ஒருவர் தன்னை ஏமாற்றி விட்டதாக, ஒளிப்பதிவாளர் மீது புகார் கொடுத்துள்ள சம்பவம் தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு ஏற்கனவே போதைபொருள் வழக்கில் பரபரப்பாகப் பேசப்பட்டவர்.

போதை பொருள்
ஐதரபாத் சினிமா துறையில் போதை பொருள் அதிகமாக புழங்குவதாக கடந்த 2017 ஆம் ஆண்டு பரபரப்பு கிளம்பியது. இதில் நடிகை சார்மி உட்பட நடிகர், நடிகைகள் சிறப்பு விசாரணை குழுவால் விசாரிக்கப்பட்டனர். இதில் ஷியாம் கே.நாயுடுவும் ஒருவர். இவரிடம் விசாரணைக் குழு 10 மணி நேரம் அப்போது விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











