சாகுந்தலம் படத்தை பார்த்த சமந்தா.. படத்திற்கு கொடுத்த முதல் விமர்சனம் என்ன தெரியுமா?
ஐதராபாத் : நடிகை சமந்தா தன்னுடைய நோய் பாதிப்பிலிருந்து மீண்டு மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமந்தா நடிப்பில் யசோதா படம் ரிலீசாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பையும் வசூலையும் குவித்தது.
இந்நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் சாகுந்தலம் படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து சிறந்த நடிகையாக இந்திய அளவில் தன்னை நிலைநிறுத்தியவர். திருமணம் தன்னுடைய கேரியரை பாதிக்காதவண்ணம் தொடர்ந்து நடித்துவந்த சமந்தா, ஒரு கட்டத்தில் நாக சைத்தன்யாவுடனான தன்னுடைய திருமணத்தை ரத்து செய்யும் முடிவை வெளியிட்டார். நாக சைத்தன்யா -சமந்தா இருவரும் கூட்டாக இந்த முடிவை வெளியிட்ட நிலையில், அவர்களது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் சமந்தா
இதையடுத்து தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்துவந்தார் சமந்தா. பாலிவுட்டிலும் படங்களிலும் வெப் தொடர்களிலும் கமிட்டானார். தான் முன்னதாக நடித்திருந்த ராஜ் மற்றும் டிகேவின் இயக்கத்தில் மீண்டும் கமிட்டானார். இதனிடையே, தெலுங்கிலும் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் கமிட்டானார். காஷ்மீரில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்றது. சமூக வலைதளங்களிலும் மிகுந்த ஆக்டிவாக பல பிட்னஸ் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அரியவகை நோய் பாதிப்பு
இந்நிலையில்தான் சமந்தாவிற்கு மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோய் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக, படங்களில் நடிக்காமல் சிகிச்சைக்காக அமெரிக்கா, கேரளா என சுற்றித் திரிந்தார். சமூக வலைதளங்களிலும் இவரை காணாமல் ரசிகர்கள் மிகுந்த கவலையடைந்தனர். இந்நிலையில், தற்போது தன்னுடைய நோய் பாதிப்பிலிருந்து மீண்டுள்ள சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துவந்த குஷி படத்தின் சூட்டிங்கில் மீண்டும் இணைந்துள்ளார்.

தமிழ் புத்தாண்டில் சாகுந்தலம் ரிலீஸ்
இதனிடையே சில வாரங்களுக்கு முன்னதாக சமந்தாவின் யசோதா படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூல்மழையும் பொழிந்தது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டில் இவரது சாகுந்தலம் படம் பான் இந்தியா படமாக, தமிழ், தெலுங்கு, இந்தி என ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் இரண்டுமுறை தள்ளிப்போன நிலையில், அடுத்தமாதம் ரிலீசாகவுள்ளது.

சாகுந்தலம் படத்தை பார்த்த சமந்தா
இந்நிலையில் இந்தப் படத்தை தற்போது படக்குழுவினருடன் இணைந்து பார்த்துள்ளார் சமந்தா. படம் குறித்த தன்னுடைய விமர்சனத்தையும் அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில், இறுதியாக சாகுந்தலம் படத்தை பார்த்ததாகவும் இதுபோன்ற அழகான படத்தை கொடுத்துள்ள இயக்குநர் குணசேகருக்கு தன்னுடைய இதயத்தை தருவதாகவும், இந்தப் படம் மிகப்பெரிய காவியங்களில் ஒன்றாக மிகவும் அன்பாக உயிர்ப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அழகான படம் என விமர்சனம்
மேலும் பேமிலி ஆடியன்ஸ் இது அழகான படம் என்று அடித்து சொல்வார்கள் என்றும், அவர்களின் அந்த கமெண்ட்டை கேட்க தன்னால் காத்திருக்க முடியவில்லை என்றும் சமந்தா குறிப்பிட்டுள்ளார். தங்களது மாயாஜால உலகத்தை குழந்தைகள் விரும்பப் போகிறார்கள் என்றும் இத்தகைய அற்புதமான பயணத்தை கொடுத்த தில் ராஜு மற்றும் நீலிமாவிற்கு நன்றி என்றும் சமந்தா கூறியுள்ளார். தன்னுடைய படத்தை தானே பார்த்து, அதன் முதல் விமர்சனத்தை சமந்தா பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











