வெட்கக்கேடு.. மசினக்குடியில் யானை உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம்.. சனம் ஷெட்டி கடும் கண்டனம்!
சென்னை: மசினக்குடியில் யானை உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு நடிகை சனம் ஷெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் கடந்த சில மாதங்களாக சுமார் 40 வயதான ஆண் காட்டு யானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றி வந்தது.
அதற்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் குணமடையவில்லை.

தண்ணீருக்குள் நின்ற யானை
இதையடுத்து கும்கி யானைகள் உதவியுடன் அந்த காட்டு யானையை பிடித்து காயத்துக்கு சிகிச்சை அளித்தனர் வனத்துறை மருத்துவர்கள். இருப்பினும் குணமாகவில்லை. இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் நின்றவாறே இருந்தது காட்டு யானை.
காது பகுதியில் பலத்த தீக்காயம்
இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் காட்டு யானையை பார்வையிட்டனர். அப்போது இடது பக்க காதில் பலத்த தீக்காயம் இருப்பதையும், காதின் சிறிய பகுதி துண்டாகி கீழே விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பரிதாபமாக உயிரிழந்தது
இதைத்தொடர்ந்து கடந்த வாரம் அந்த காட்டு யானையை பிடித்து சிகிச்சை அளிக்க லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.

வெளியான பகீர் வீடியோ
இதைத்தொடர்ந்து சிங்காரா வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். யானைக்கு தீ வைத்தவர்கள் யார் என்று விசாரித்து வந்தனர். பின்னர் சிலரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் காட்டு யானைக்கு சிலர் தீ வைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

யானைக்கு உயிருடன் தீ
மசினகுடி மாவனல்லா பகுதியில் உள்ள ரிசார்ட்டின் அருகே வந்த காட்டு யானையை விரட்ட அதன் ஊழியர்கள் டயர்களுக்கு தீ வைத்து அதனை காட்டு யானை மீது வீசுவதும், இதனால் வலி பொறுக்க முடியாமல் யானை பிளிறியப்படி ஓடியதும் தெரிந்தது. இந்த வீடியோ பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியது.

பலரும் கண்டனம்
இதுதொடர்பாக ஊழியர்கள் இரண்டு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சனம் ஷெட்டி, யானைக்கு தீ வைக்கப்படும் வீடியோவை பகிர்ந்து கடுமையாக சாடியுள்ளார்.
Recommended Video

கடுமையான தண்டனை
மனிதனின் முட்டாள்தனம் மற்றும் மனசாட்சியின் தீவிர பற்றாக்குறை என்றும் இது பாதிப்பில்லாத வாழ்க்கையின் முடிவுக்கு வழிவகுக்கிறது! நமக்கு அவமானம் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்


Click it and Unblock the Notifications











