கொலை மிரட்டல்.. புகார்... சர்ச்சையில் சிக்கிய மீரா மிதுன்.. பிரபல நடிகைக்கு கை மாறிய அழகிப்பட்டம்!
சென்னை: மிஸ் சௌத் இந்தியா 2016 போட்டி நடந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அதில் இரண்டாம் இடத்தை பெற்ற நடிகை சனம் ஷெட்டி அவர்களுக்கு முதலிடத்திற்கான பட்டம் எதிர்பாராமல் தேடிவந்துள்ளது.
2016-ம் நடந்த மிஸ் சௌத் இந்தியா அழகி போட்டியில் மீரா மிதுன் வெற்றி பெற்றார். 2வது இடத்தை நடிகை சனம் ஷெட்டி கைப்பற்றினார்.
இந்நிலையில், மீரா மிதுன் தனியாக அழகிப் போட்டி நடத்த ஏற்பாடு செய்ததோடு, இதுதொடர்பாக தனக்கு கொலை மிரட்டல் வருவதாக போலீசிலும் புகார் அளித்தார்.

பட்டம் ரத்து:
இதையடுத்து, மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை மீரா மிதுன் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதாக கூறி 2016 -ஆம் ஆண்டு அவருக்கு வழங்கிய மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை ரத்து செய்வதாக சம்மந்தப்பட்ட அமைப்பு அறிவித்தது. மேலும், மீரா மிதுன் இந்தப் பட்டத்தை வேறு எங்கும் பயன்படுத்தக்கூடாது என்றும் அந்த அமைப்பு அறிவிப்பு வெளியிட்டது.

அறிவிப்பு:
தற்போது மீரா மிதுனுக்கு வழங்கப்பட்ட அந்த பட்டம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள நிலையில், மிஸ் சௌத் இந்தியா-2016க்கான பட்டம் 2வது இடம் பிடித்த சனம் ஷெட்டிக்கு சென்று சேர்ந்துள்ளது. இதை போட்டி நடத்தும் அந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாடலிங்:
போட்டி நடந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அதில் இரண்டாம் இடம் பெற்ற ஒருவருக்கு முதலிடத்திற்கான பட்டம் எதிர்பாராமல் தேடிவந்துள்ளது மாடலிங் உலகிலேயே ஆச்சர்யமான ஒன்று தான்.

பிரபல நடிகை:
சனம் ஷெட்டி பிரபல மாடலாக மட்டும் அல்லாமல், தென்னிந்திய திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகையாக வளர்ந்து வருகிறார். தமிழில் அம்புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, கதம் கதம், சவாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அர்ஜுன் கலைவன் என்பவர் இயக்கிவரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











