Jana Nayagan: அமைதிகாக்கும் பிரபலங்கள்.. இறங்கி அடிக்கும் சனம் ஷெட்டி.. பரபரக்கும் ஜனநாயகன் பஞ்சாயத்து
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படமான ஜன நாயகன் படம் நாளை அதாவது ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் தராததால், படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழலில் படக்குழு உள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்படி இருக்கையில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்காமல் இருப்பதற்கு முக்கிய காரணமே, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் உள்ளடி அரசியல் தான் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இப்படி இருக்கும்போது விஜய்க்கு ஆதரவாக திரைத்துறையில் மெல்ல மெல்ல குரல்கள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன.
நடிகர் விஜய் தனது கட்சி தொடங்கிய போது, தான் கமிட் ஆகி உள்ள கடைசி படத்தில் மட்டும் நடித்து விட்டு, அதன் பின்னர் முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்தார். இதனால் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்திற்கு விஜய்க்கு ரூபாய் 235 கோடிகள் சம்பளம் என்று எல்லாம் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜன நாயகன் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் உள்ளடி அரசியல் தான் என்று விஜய் ரசிகர்கள் பெரும்பாலும் விமர்சிக்கிறார்கள். ஆனால் பாஜகவும் சென்சார் விவகாரத்திற்கும் கொஞ்சம் கூட தொடர்பு இல்லை என்று பாஜக குஷ்பு திட்டவட்டமாக தெரிவித்தார். இந்நிலையில் நாளை காலை தான் சென்சார் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இதனால் படத்தின் ரிலீஸை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது படக்குழு.
திரைத்துறை ரியாக்ஷன்: நடிகர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்று ரசிகர்கள் தரப்பில் வலுவான குரல் வந்தாலும், திரைத்துறையில் இருந்து அந்த அளவுக்கு பலமான ஆதரவுக் குரல்கள் வெளிவரவில்லை. வெகு சில இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் தான் தங்களது ஆதரவை விஜய்க்கு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சனம் ஷெட்டி: அதாவது, " அநியாயத்தின் உச்சகட்டம் இது எல்லாம். ஆனால் நீங்க பண்ணுங்க.. நீங்க இப்படி பண்ண.. பண்ண.. அவங்க (விஜய்) உயர்ந்து கொண்டே தான் போவாங்க. நாங்க கை விட்டுவிட மாட்டோம். பொங்கல் அன்று படம் வரவில்லை என்றால் என்ன? படம் வெளியாகும் நாள் தான் நமக்கு பொங்கல். சும்மாவே ஜன நாயகன் வேற லெவல் பிளாக் பஸ்டர் தான். என்னமோ நினைத்து நீங்கள் செய்த வேலையால், இப்போது சினிமா வரலாற்றிலேயே யாருமே எதிர்பார்க்காத, யாருமே செய்யாத சம்பவத்தை நாங்கள் செய்து காட்டுவோம். காத்திருங்கள். காத்திருக்க நாங்கள் ரெடி, அதற்கு அது தகுதியானதும் கூட. நீ வா தல நாங்க இருக்கோம்" என்று பேசி உள்ளார். அவரது இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது மட்டும் இல்லாமல் உச்ச நட்சத்திரங்களே அமைதியாக இருக்கும்போது சனம் ஷெட்டி குரல் கொடுத்துள்ளது, விஜய் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











