அது கருணா கோஷ்டி நடத்தும் விழா அல்ல! - நடிகை சங்கீதா, கிரீஷ் விளக்கம்
சுவிட்சர்லாந்தில் தமிழ் அமைப்புகள் நடத்தும் புத்தாண்டு விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, பின்னணி பாடகரும் சங்கீதாவின் கணவருமான கிரிஷ் ஆகியோர் பங்கேற்க திடீர் எதிர்ப்பு கிளம்பியது. விடுதலைப்புலி எதிர்ப்பாளரான கருணா கோஷ்டியினர் இவ்விழாவை நடத்துவதாகவும் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் வற்புறுத்தப்பட்டது.
இதையடுத்து ஜீவா அந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்றுஅறிவித்து விட்டார்.
எனக்கு தமிழர் நலன்தான் முக்கியம். தமிழர் விரும்பாத எதையும் நான் செய்ய மாட்டேன். எனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டேன் என்று அவர் அறிக்கை விடுத்தார்.
ஆனால் சங்கீதா, கிரிஷ் இருவரும் அந்த விழாவை விடுதலைப்புலி எதிர்ப்பாளர்கள் நடத்தவில்லை என்று மறுத்துள்ளனர்.
இது குறித்து சங்கீதா கூறும்போது, "புத்தாண்டு விழாவை சுவிட்சர்லாந்தில் உள்ள உள்ளூர் தமிழர்கள்தான் ஏற்பாடு செய்துள்ளனர். கிரிஷ்க்கு பாராட்டு விழா நடத்துவதாக சொல்லி அழைத்தனர். சமீபத்தில் இலங்கையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க மனோ, கிரிஷ், சுசித்ரா, உள்ளிட்டோர் சென்று இருந்தனர்.
இலங்கை அரசு பின்னணியில் அவ்விழா நடப்பதாகவும் அதில் பங்கேற்கக் கூடாது என்றும் வற்புறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் நாடு திரும்பினர். இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ததை பாராட்டத்தான் இவ்விழாவை நடத்துவதாக அழைப்பிதழ் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர்," என்றார்.
புத்தாண்டு நிகழ்ச்சியை நடத்தும் சுவிட்சர்லாந்து தமிழ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை அரசு பின்னணியில் நடந்த நிகழ்ச்சியை ரத்து செய்ததற்காகவே கிரிஷ்க்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். எங்களை ராஜபக்சேவின் கைக்கூலிகள் என்று கூறுவது வேதனையளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












