நான் என்ன ஏடிஎம் மிஷினா? பணத்திற்காக 14வயதில் நடிக்க வைத்த அம்மா.. சங்கீதா கிரிஷ் வேதனை!
சென்னை : முன்னணி நடிகையான சங்கீதா கிரிஷ், பணத்திற்காக 14 வயதில் தன்னை சினிமாவில் நடிக்க அனுப்பியதாகவும், ஏடிஎம் மிஷன் போல தன்னை பயன்படுத்திக் கொண்டதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
1998ம்ஆண்டு வெளியான காதலே நிம்மதி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சங்கீதா. பாலா இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன் படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்.
சினிமா மட்டுமில்லாமல் தொலைக்காட்சியிலும் ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருந்து உள்ளார் நடிகை சங்கீதா. மேலும், பாடகர் கிரிஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

நடிகை சங்கீதா கிரிஷ்
நடிகை சங்கீதா அண்மையில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தில் படத்தில் விஜய்யின் அண்ணியாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ந் தேதி வெளியானது. நடிகை சங்கீதா, வீட்டை அபகரித்துவிட்டதாக சங்கீதாவின் தாயார் கடந்த ஆண்டு புகார் கூறியிருந்தார்.

நான் என்ன ஏடிஎம் மிஷினா?
இந்த புகாருக்கு சங்கீதா அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது டிராண்டாகி வருகிறது. அந்த பேட்டியில், எல்லா நடிகர்களுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால், சிறுவயதிலேயே நடிக்க வந்து விடுவார்கள். என்னுடைய அம்மா என்னை 14 வயதிலேயே நடிக்க அனுப்பி வைத்துவிட்டார்கள். என்னுடைய வருமானத்தை நம்பித்தான் அந்த குடும்பமே இருந்தது. நான் ஓரு ஏடிஎம் மிஷின் மாதிரிதான் இருந்தேன்.

எனக்கு வாழ்க்கை இருக்கு
ஆனால், நமக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு, அந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் நாம் நினைக்கும் போது, நம்மை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவர்கள் நமக்கு எதிரானவர்களாகி விடுவார்கள். ஏன் என்றால் ஏடிஎம் மிஷினில் கார்டு போட்டா காசு வரவில்லை. இதனால், என்னாகும், ஏடிஎம் மிஷினை தட்டுவோம், அடிப்போம், எப்படியாவது காசு வராதா என்று எதிர்பார்ப்போம் அப்படித்தான் என் வாழ்க்கையில் நடந்தது.

ஊதாரித்தனமாக செலவு செய்தனர்
எனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு ஒரு குழந்தை இருக்கு, என் குடும்பத்திற்கு யார் யாருக்கு என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் குறையே இல்லாமல் செய்துவிட்டேன். நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை அவர்கள் சரியாக பயன்படுத்தாமல், ஊதாரித்தனமாக செலவு செய்துவிட்டு, மீண்டும் மீண்டும் என்னிடம் பணம் கேட்கும் போது கஷ்டமா இருக்கும்.

என் அம்மா தப்பா இருக்கலாம்
என்னால் முடிந்த வரை இப்போதும் அவர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், பணம் கொடுக்கும் அளவை குறைத்துக்கொண்டது தான் இப்போது பிரச்சனை, அவர்கள் இருக்கும் வளசரவாக்கம் வீட்டின் மீது நிறைய கடன் இருந்தது. அந்த கடனை எல்லாம் நான் அடைத்த பிறகுதான், அந்த வீட்டை எனக்கு கொடுத்தார்கள். அந்த வீட்டில் இப்போது அம்மா வாழ்ந்து வருகிறார்கள். என் அம்மா தப்பானவங்களா இருக்கலாம் ஆனால், அவர்களை வீட்டை விட்டு வெளியில் அனுப்பும் அளவுக்கு நான் தப்பான மகள் இல்லை என நடிகை சங்கீதா பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











