விஜய்யோட மட்டும்தான் அம்மாவா நடிக்கவில்லை.. பெஸ்ட்டிற்காக காத்திருக்கும் சரண்யா!
சென்னை :நடிகை சரண்யா பொன்வண்ணன் ஏறக்குறைய கோலிவுட்டின் அனைத்து ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்து முடித்துள்ளார்.
இவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகிவரும் நிலையில், அடுத்ததாக கார்த்தியின் விருமன் படத்தில் இவர் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் இணைந்து சரண்யா பொன்வண்ணனும் கலந்துக் கொண்டார்.

நடிகை சரண்யா பொன்வண்ணன்
நடிகை சரண்யா நாயகியாகத்தான் கோலிவுட்டில் தனது அறிமுகத்தை கொடுத்தார். முதல் படமே இவருக்கு மிகச்சிறப்பாக அமைந்தது. நாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து சில படங்களில் நடிக்கவும் செய்தார். ஆனால் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், திருமணமாகி செட்டில் ஆனார்.

8 ஆண்டுகள் கழித்து ரீ-என்ட்ரி
8 ஆண்டுகள் கழித்து மீண்டும் கடந்த 2003ம் ஆண்டில் திரைத்துறையில் கால்பதித்த சரண்யா, தொடர்ந்து கேரக்டர் ரோல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவர் ஏறக்குறைய தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்துவிட்டார். அது கிராமத்து கெட்டப்பாக இருந்தாலும் சிட்டி கேரக்டராக இருந்தாலும் அந்த கதாபாத்தில் தன்னை சிறப்பாக பொருத்தி வருகிறார்.

அம்மா கேரக்டர்களில் முத்திரை
அம்மா கேரக்டரா கூப்பிடு சரண்யாவை என்பது போல இவர் நடித்துள்ள அனைத்து அம்மா கேரக்டர்களிலும் முத்திரை பதித்து பல்வேறு விருதுகளையும் பெற்று வருகிறார். தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இதன்மூலம் அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கினார்.

அடுத்தடுத்த அம்மா கேரக்டர்கள்
ராம் படத்தில் துவங்கிய இவரது இந்தப் பயணம் தொடர்ந்து, எம்டன் மகன், தவமாய் தவமிருந்து, கிரீடம், வேல், தெனாவட்டு, யாவரும் நலம், தென்மேற்கு பருவகாற்று, ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, நான் சிகப்பு மனிதன், வேலையில்லா பட்டதாரி, கோலமாவு கோகிலா, களவாணி என பல படங்களில் தொடர்ந்தது.

விருமன் படத்தில் சரண்யா
இன்னும் இரு தினங்களில் திரையில் ரிலீசாகவுள்ள விருமன் படத்திலும் கார்த்திக்கு அம்மாவாக சரண்யா நடித்துள்ளார். இந்தப் படத்தின் பிரஸ் மீட் நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு பேசிய சரண்யா, படத்தின் சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டார்.

விஜய்யுடன் நடிக்காத சரண்யா
ஏறக்குறைய கோலிவுட்டின் அனைத்து ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்துள்ள சரண்யா, விஜய்க்கு மட்டும் இன்னும் அம்மாவாக நடிக்கவில்லை. இதுகுறித்து வருத்தம் இல்லை என்றும் ஆனால் ஏன் என்ற கேள்வி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விஜய்யும், தன்னிடம் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான வாய்ப்பிற்காக காத்திருப்பு
ஆனால் சிறப்பான ஒரு வாய்ப்பு காத்திருப்பதாகவும் அதனாலதான் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு தள்ளிப் போவதாக தான் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார். விரைவில் இந்த வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வாய்ப்பிற்காக தான் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











