புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 35 வயதேயான பிரபல நடிகை மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. ஷாக்கில் திரையுலகம்!
சென்னை: புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகை சரண்யா சசி காலமானார். அவருக்கு வயது 35.
பிரபல மலையாள நடிகை சரண்யா சசி. மலையாள டிவி சீரியல் நடிகையாக 2006ஆம் ஆண்டு பாலச்சந்திரா மேனன் சீரியல் மூலம் அறிமுகமானார் சரண்யா சசி.
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்துள்ளார் சரண்யா சசி. இவர் மலையாளத்தில் மோகன்லாலின் சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உள்பட பல படங்களில் நடித்து உள்ளார்.

பிரைன் ட்யூமர் - ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ், மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் சரண்யா சசி. சரண்யா சசியின் மார்க்கெட் உயரும் நேரத்தில் அவருக்கு பிரைன் ட்யூமர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சரண்யா சசி, அவரது குடும்பத்தினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அறுவை சிகிச்சை - நடிகர் நடிகைகள் உதவி
ஆனால் மன தைரியத்தை கொஞ்சமும் விடாத சரண்யா சகி இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுவரை 11 அறுவை சிகிச்சை செய்துள்ள சரண்யா சசிக்கு மலையாள நடிகர், நடிகைகள் பண உதவி செய்து வந்தனர்.

11 வது அறுவை சிகிச்சை - மோசமடைந்த உடல்நிலை
அவருடைய 11வது அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. படுத்த படுக்கையாக இருந்து வந்தார் சரண்யா சசி. சரண்யா சசிக்கு அவரது தோழியான மலையாள நடிகை ஸீமா நாயர் உதவி செய்து வந்தார்.

தண்டுவடத்தில் பரவிய புற்று நோய்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய தண்டுவடத்திலும் நோய் பரவியதால் அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்தது. ஆனால் தண்டுவடத்தில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது என மருத்துவர்கள் கை விரித்து விட்டனர்.

கீமோ தெரபி - கொரோனா தொற்று
இதனைதொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி சரண்யா சசிக்கு கீமோ தெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே கடந்த மே 23ஆம் தேதி சரண்யாவின் தாயாருக்கும் சகோதரருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாளுக்கு நாள் மோசம் - கவலைக்கிடம்
இதனை தொடர்ந்து சரண்யா சசிக்கும் கொரோனா தொற்று பரவியது. சரண்யா சசிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடந்த மாதம் ஸீமா நாயர் தெரிவித்தார். மேலும் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் கவலைக்கிடமான நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சோகத்தில் மலையாள சினிமா
மேலும் திருவனந்தப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஸீமா நாயர் தெரிவித்தார். சரண்யா சசி குறித்து ஸீமா நாயர் தெரிவித்த இந்த தகவல் மலையாள திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியது.

இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணம்
கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மற்றும் அவருக்கு ஏற்கனவே இருந்த புற்றுநோய் உள்ளிட்ட பிரச்சனைகளால் சரண்யா சசியின் உடல் நிலை ரொம்பவே மோசமடைந்தது. இந்நிலையில் சரண்யா சசி இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் அதிர்ச்சி
அவரது மறைவு மலையாளம் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கேரள முதல்வர் பினராய் விஜயனும் சரண்யா சசியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் இரங்கல் - வெள்ளத்தின் போது உதவினார்
இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, நடிகை சரண்யா சசி நம்பிக்கையுடன் நோயை எதிர்த்துப் போராடினார். சமூகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பையும் முதல்வர் பினராயி விஜயன், மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது நடிகை சரண்யா சசி தனது மருத்துவச் செலவிலிருந்து ஒரு தொகையை மக்களுக்காக ஒதுக்கியதை நினைவு கூர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











