Saroja Devi Passed Away: நடிகை சரோஜா தேவி காலமானார்.. திரைத்துறைக்கு பேரிழப்பு
சென்னை: கன்னடத்து பைங்கிளி என்று அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி இன்று காலமானார். அவருக்கு வயது 87. இவர் தமிழ் ,தெலுங்கு , கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.
நடிகை சரோஜா தேவி, கர்நாடகா மாநிலத்தில் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். சரோஜா தேவி உண்மைப் பெயர் ராதாதேவி கவுடா. பைரப்பா, ருத்ரம்மா தம்பதிகளுக்கு நான்காவது மகளாக பிறந்தார். தனது தாத்தாவிடம் நடனம் மற்றும் பாட்டும் கற்று கொண்டு இரண்டிலும் கை தேர்ந்தவரானார். சரோஜாதேவிக்கு பி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது அதன் மூலம் மகாகவி காளிதாஸ் எனும் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சரோஜாதேவி. முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார்.

சரோஜா தேவி: இதைத்தொடர்ந்து 1958 ஆம் ஆண்டு நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக மானார். முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால், தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல திரைப்படத்தில் நடித்துள்ளார். பார்த்திபன் கனவு, இருவர் உள்ளம், அன்பே வா, படகோட்டி, பறக்கும் பாவை என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து அந்த கால கட்டத்தில் முன்னணி நடிகையாக நிகழ்ந்தார். இவர் எம்.ஜி.ஆருடன் மட்டும் 26 படங்களிலும் சிவாஜி உடன் 22 படங்களிலும் நடித்துள்ளார். இவர்கள் மட்டுமில்லாமல், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஏ.வி.எம். ராஜன், ரவிச்சந்திரன் ஆகிய பிரபல நடிகர்களுடனும் இவர் ஜோடியாக நடித்துள்ளார். அதன் பிறகு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் சரோஜா தேவி தொடாத உயரம் இல்லை என்றே கூறலாம். இவரின் நாயகி அவதாரம் முடிந்தும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வந்தார் சரோஜா தேவி .
முன்னணி நடிகர்களுடன்: சரோஜாதேவிக்கு பல அடைமொழி பெயர்கள் இருக்கிறது பொதுவாக ஒரு நடிகை அல்லது நடிகருக்கு ஒரு அடை மொழி பெயர் இருக்கும் ஆனால் சரோஜா தேவிக்கு தமிழ் ,தெலுங்கு , கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் அடைமொழி பெயர்கள் உண்டு, அபிநய சரஸ்வதி, தெலுங்கு திரையுலகினர் இவர் சலபாசுந்தரி என்றும், கன்னடத்தில் அபிநய காஞ்சனா மாலா என்றும், ஹிந்தியில் அபிநய பாரதி என்று இவரது ரசிகர்கள் இவரை அழைப்பார்கள். இவருக்கு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இன்று உடல்நலக்குறைவு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் பெங்களுரில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 87. இவரின் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவர் கடைசியாக சூர்யா, நயன்தாரா நடித்த 'ஆதவன்' படத்தில் நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











