நடிகை சத்யப்பிரியாவிடம் ரூ.60,000 கொள்ளை

பத்து ரூபாய் நோட்டுக்களை ரோட்டில் வீசி கவனத்தை திசைதிருப்பி, நடிகை சத்யப்பிரியாவிடம் ரூ.60,000 கொள்ளையடிக்கப்பட்டது.
சினிமா நடிகையான சத்யப்பிரியா இப்போது ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். இவரது வீடு சென்னை தியாகராய நகர் ராமானுஜர் தெருவில் உள்ளது.
நேற்றிரவு 7.30 மணியளவில் காரில் பாண்டிபஜார் ஹோட்டலுக்கு வந்த இவர் காரில் இருந்தவாறே உணவை பார்சல் செய்ய ஆர்டர் செய்தார். காரை அவரே ஓட்டி வந்திருந்தார்.
ஹோட்டல் சப்ளையர் சத்யப்பிரியாவிடம், டிபன் பார்சலுக்கான பில் தொகையை கேட்டபோது தனது கைப்பையைத் திறந்து ரூ. 1,000 நோட்டை எடுத்துத் தந்தார்.
அப்போது ஆட்டோ டிரைவர் உடையில் வந்த ஒருவர் சத்யபிரியாவிடம் வந்து, உங்கள் கைப்பையில் இருந்து விழுந்த பணம் ரோட்டில் சிதறிக் கிடக்கிறது என்றார்.
இதையடுத்து சத்யப்பிரியா கைப்பையை காரில் வைத்துவிட்டு, அவசரமாக காரைவிட்டு இறங்கி ரோட்டில் சிதறிக் கிடந்த 10 ரூபாய் நோட்டுக்களை பொறுக்கினார்.
அப்போது அந்த நபர் காரில் இருந்த அவரது கைப்பையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினான்.
இதையடுத்து சத்யப்பிரியா போலீசுக்கு தகவல் கொடுத்தார். சிறிது நேரத்தில் போலீஸ் துணைக்கமிஷனர் சண்முகவேல், உதவி கமிஷனர் மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், பழனிசெல்வம் ஆகியோர் போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். (யாராவது பொது மக்கள் இப்படி புகார் தந்திருந்தால் துணை கமிஷ்னர்-உதவிக் கமிஷ்னர் எல்லம் ஓடி வருவார்களா?).
அந்தப் அந்தப் பகுதி ஆட்டோ டிரைவர்கள், கடைக்காரர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால், எந்த துப்பும் கிடைக்கவில்லை.
சத்யப்ரியா தனது பையில் ரூ. 60,000க்கும் மேல் பணம் இருந்ததாகவும், கிரெடிட் கார்டுகள், டெபி்ட் கார்டுகள் இருந்ததாகக் கூறியுள்ளார்.
இவரது மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருப்பதால் அதற்கான ஷாப்பிங் செய்து முடித்துவிட்டு வீடு திரும்பியபோது ஹோட்டல் முன் இந்த சம்பவம் நடந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications