நடிகை பலாத்கார வழக்கு.. விசாரணை அதிகாரியை மிரட்டியதாக நடிகர் திலீப் மீது எஃப்ஐஆர் பதிவு!
திருவனந்தபுரம்: தென்னிந்திய சினிமாவில் நடித்து பெரும் புகழ்பெற்ற மலையாள நடிகை கடந்த 2017ம் ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரிகளை நடிகர் திலீப் மிரட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாள நடிகர் திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலசந்திர குமார் சமீபத்தில் நடிகருக்கு எதிராக கொடுத்த வாக்குமூலம் வழக்கின் திசையை திருப்பிப்போட்டது.
இந்நிலையில், விசாரணை அதிகாரிகளையே நடிகர் திலீப் கொன்று விடுவதாக மிரட்டிய விபரம் வெளியான நிலையில், நடிகர் திலீப் மற்றும் 5 பேர் மீது கேரள போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

நடிகை பலாத்கார வழக்கு
கடந்த 2017ம் ஆண்டு பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி எடுத்தது. அந்த விவகாரத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு சம்பந்தம் இருக்கும் விஷயம் தெரிய வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

84 நாட்கள் சிறை
54 வயதாகும் நடிகர் திலீப் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 84 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். அந்த வழக்கு தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

20 சதவீதம் சத்தமாக
நடிகையின் பலாத்கார வீடியோவில் சத்தம் குறைவாக இருப்பதாகக் கூறி நடிகர் திலீப் அதனை ஒரு ஸ்டூடியோவிற்கு அனுப்பி 20 சதவீதம் அதிக அளவு சத்தத்தை கூட்டி கேட்டு ரசித்ததாக திலீப்பின் நண்பரும் மலையாள இயக்குநருமான பாலசந்திர குமார் சமீபத்தில் அளித்த வாக்குமூலம் மலையாள திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கொலை மிரட்டல்
மேலும், இந்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகளின் கைகளை வெட்டிவிடுவேன் என்றும் லாரி ஏற்றிக் கொன்றுவிடுவேன் என்றும் நடிகர் திலீப் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ ஆதாரங்களும் தற்போது வெளியகி உள்ள நிலையில், அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டு அவரை ஏ1 குற்றவாளி ஆக்கி உள்ளனர். நடிகர் திலீப் மற்றும் இந்த விவகாரம் தொடர்பாக மேலும், 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திலீப்பின் உறவினர்கள்
மலையாள நடிகர் திலீப், அவரது சகோதரர் அனூப் மற்றும் அவரது உறவினர் மீது ஏ1 முதல் ஏ3 குற்றவாளிகள் என இந்த கொலை மிரட்டல் மற்றும் விசாரணையை சிதைக்கும் பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், பாபு செம்மங்கநாத், அப்பு மற்றும் அடையாளம் தெரியாத நபர் என மொத்தம் 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பலாத்கார வழக்கின் தீர்ப்பு நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நடிகர் திலீப் இப்படியொரு சிக்கலில் வசமாக சிக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











