Shakeela - ஒருநாளைக்கு 4 லட்சம் ரூபாய்.. ஆனால்.. மனம் திறந்து பேசிய ஷகீலா
சென்னை: Shakeela (ஷகீலா) தான் ஒரு நாளைக்கு நான்கு லட்சம் ரூபாய் சம்பாதித்ததாக நடிகை ஷகீலா தெரிவித்திருக்கிறார்.
இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ஷகீலா. 1995ஆம் ஆண்டு பிளே கேர்ள்ஸ் என்ற படத்தின் மூலம் தனது 18ஆவது வயதில் திரையுலகில் நுழைந்தார். ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்திருந்தார். அவருக்கு தங்கையாக ஷகீலா நடித்திருந்தார். அடல்ட் படமாக உருவாகியிருந்ததால் முதல் படத்திலிருந்தே அடல்ட் நடிகை என்ற முத்திரை ஷகீலா மேல் குத்தப்பட்டது.

ஷகீலாவை ஓங்கி அறைந்த சில்க் ஸ்மிதா: அந்தப் படத்தின் ஒரு காட்சியில் ஷகீலாவை சில்க் ஸ்மிதா அறைய வேண்டும். அந்த காட்சி எடுக்கப்படுவதற்கு முன்பு சில்க்கிடம் சென்ற ஷகீலா எப்படி அறைவீர்கள் என கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ஷகீலாவை சில்க் ஸ்மிதா ஓங்கி அறைந்துவிட்டார். சில்க் ஸ்மிதா அப்படி நடந்துகொண்டதை இன்றுவரை தன்னால் மறக்க முடியவில்லை என ஷகீலா பலமுறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மோதிர கையால் குட்டுப்பட்ட கதை: சில்க் ஸ்மிதாவின் கையால் அறை வாங்கியதாலோ என்னவோ அவருக்கு போட்டியாகவே திரையுலகம் ஷகீலாவை முன்னிறுத்தியது. அதற்கு தகுந்தாற்போல் ஷகீலாவும் பல அடல்ட் படங்களில் நடித்தார். சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து இறந்துபோக அவரது இடத்தை ஷகீலா கிட்டத்தட்ட நெருங்கினார். ஆனால் சில்க் இடத்தை அவரால் முழுவதுமாக பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் ஷகீலாவின் வளர்ச்சி அசுர வேகத்திலேயே இருந்தது.
100 நாட்கள் ஓடிய படம்: ஷகீலா நடித்த கின்னாரா தும்பிகள் என்ற படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த சமயத்தில் ஒரு கவர்ச்சி நடிகையின் படம் எப்படி 100 நாட்கள் ஓடியது என்றுதான் ஆச்சரியப்பட்டார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி ஷகீலாவுக்கும் அதை நினைத்து ரொம்பவே ஆச்சரியம்தான் பட்டார். அதுமட்டுமின்றி ஷகீலாவுக்கு இருக்கும் க்ரேஸை பார்த்து மலையாளத்தின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரே கொஞ்சம் பயந்துபோனார்கள் என்ற பேச்சும் எழுந்தது உண்டு.

ஒருநாளைக்கு 4 லட்சம் ரூபாய்: இந்நிலையில் ஷகீலா சமீபத்தில் அளித்த பேட்டியில், "என்னை குறித்து விக்கிபீடியாவில் இருக்கும் விவரங்கள் பொய்யானது. எனக்கு பிளாட் ,BMW காரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் நான் வாடகை வீட்டில் இருந்து வருகிறேன்.ஒரு காலகட்டத்தில் ஒரு நாளைக்கு மட்டும் ரூபாய் 4 லட்சம் சம்பளம் வாங்கினேன். என்னிடம் இருந்த பணத்தை எல்லாம் என்னுடைய அக்கா எடுத்துக்கொண்டார்" என்றார்.
தத்து எடுத்த ஷகீலா: இதற்கிடையே ஷகீலா விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவருக்குள் இருக்கும் மிகச்சிறந்த மனித நேயத்தை அனைவருமே தெரிந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் அவர் சக போட்டியாளர்களால் அம்மா என்றே அழைக்கப்பட்டார். மேலும் நமிதா என்ற திருநங்கையையும் அவர் தத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











