ஆபாச படங்கள் தயாரித்து வெளியீடு.. நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது.. பரபரப்பு!
மும்பை: ஆபாச பட வழக்கில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் பிரபுதேவா உடன் மிஸ்டர் ரோமியோ திரைப்படத்திலும் விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.
இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஷில்பா ஷெட்டி. இவர் கடந்த 2009ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார்.

கணவர் திடீர் கைது
இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஷில்பா ஷெட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் இருந்தார். இந்நிலையில் ஷில்பா ஷெட்டியின் கணவர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு கைது
சில செயலிகள் மூலம் ஆபாச படங்கள் தயாரித்து, அதனை விநியோகம் செய்ததாக கடந்த பிப்ரவரி மாதம் ராஜ் குந்த்ரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில், நடிகை ராஜ்குந்த்ரா நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

முக்கிய குற்றவாளி
இது தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கையில், ஆபாச படங்களை தயாரித்து, விநியோகம் செய்ததாக கடந்த பிப்ரவரி மாதம் தொடரப்பட்ட வழக்கில், விசாரணைக்கு பின்னர் ராஜ்குந்த்ரா நேற்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், அவர் முக்கிய குற்றவாளியாக உள்ளது தெரியவருகிறது. .

தேவையான ஆதாரங்கள்
அவருக்கு எதிராக தேவையான ஆதாரங்கள் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ராஜ் குந்த்ரா மீது மோசடி, பொது இடங்களில் ஆபாசமான செயல்களில் ஈடுபடுவது மற்றும் ஆபாசமான புத்தகங்கள் அல்லது இலக்கியங்களை பகிரங்கமாக காட்சிப்படுத்துதல் அல்லது பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஜாமின் கேட்டு மனுத்தாக்கல்
ஆனால், இதனை மறுத்துள்ள ராஜ்குந்த்ரா, ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனிடையே #RajKundraArrest என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. பலரும் ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி பிரபலங்களுடன் உள்ள போட்டோக்களை ஷேர் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.

பூனம் பாண்டே வழக்கு
முன்னதாக ராஜ் குந்த்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பூனம் பாண்டே மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாடல் மற்றும் நடிகையான பூனம் பாண்டே ராஜ் குந்த்ரா மற்றும் அவரது அசோசியேட்ஸ் தன்னுடனான ஒப்பந்தம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தனது கன்டென்ட்டை பயன்படுத்தி வருவதாக வழக்கு பதிவு செய்ததாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











