டீக்கடைக்காரர் மீது பொய் புகார் கூறியுள்ளார் ஷோபனா.. பஞ்சர் கடைக்காரர் பரபரப்பு பேட்டி!

நடிகை ஷோபனாவால் பெரும் பரபரப்பாகியுள்ளது. ஏற்கனவே திருமணமான ஒருவரை அபகரித்துக் கொண்டதாக அந்த நபரின் மனைவி ஷோபனா மீது பரபரப்புப் புகார் கொடுத்தார். இந்த நிலையில் ஒரு டீக்கடைக்காரரை அகற்ற கமிஷனர் ஆபீஸ் வரைக்கும் போய் பரபரப்பைக் கிளப்பியுள்ளார் ஷோபனா. அவரது புகாரை ஏற்ற போலீஸாரும் உடனே நடவடிக்கை எடுத்து டீக்கடையை ராவோடு ராவாக தூக்கி விட்டனர்.
ஆனால் ஷோபனா பொய் பேசுவதாக அவரது வீட்டுக்கு அருகே பஞ்சர் கடை நடத்தி வரும் ஒருவர் கூறியுள்ளார். அவருக்கு ரோட்டில் யார் நடந்து போனாலும் கூட பிடிக்காது என்றும் அவர் கூறுகிறார்.
இதுகுறித்து பஞ்சர் கடை நடத்தி வரும் ஜோதி கூறுகையில்,
ஷோபனா வீடு அருகே நடமாடும் டீக்கடை நடத்தியது நெல்லையைச் சேர்ந்த பெண். இவர் சுமார் 35 வருடங்களாக அந்த பகுதியில் கடை நடத்தி வந்துள்ளார். காலையில் டிபன், மதியம் சாப்பாடு ஆகியவையும் விற்பார். பங்களாக்கள் நிறைந்த அந்த பகுதியில் வேலை பார்க்கும் ஏழை தொழிலாளர்கள் இந்த கடையில்தான் சாப்பிடுவது வழக்கம்.
ஷோபனா வீட்டிற்கு வரும் பெண்களை கேலி செய்ததாக எந்த சம்பவமும் நடக்கவில்லை. தினமும் ஷோபனா வீட்டு காவலாளி ஷோபனாவுக்கு தெரியாமல் டிபன் கடை நடத்திய பெண்ணுக்கு தண்ணீர் கொடுத்து வந்தார். நேற்று தண்ணீர் பிடித்தபோது ஷோபனா பார்த்து விட்டார். உடனே அந்த பெண்ணையும், காவலாளியையும் திட்டியுள்ளார்.
உடனே டிபன் கடை நடத்தி வந்த பெண்மணி ஷோபனாவிடம் சென்று மன்னிப்பு கேட்டார். இந்த பிரச்சினைக்காகவே தவறான தகவல் கொடுத்து கடையை காலி செய்ய வைத்துள்ளனர்.
நானும் இந்த பகுதியில் 30 வருடங்களுக்கும் மேலாக பஞ்சர் கடை நடத்துகிறேன். இந்த பகுதியில் ஒரு நாளும் எந்த பிரச்சினையும் வராது. சுமார் 2 வருடங்களுக்கு முன்புதான் ஷோபனா இந்த வீட்டில் வந்து குடியேறினார். அவர் வந்தது முதலே பிரச்சினைதான். அவர் தினமும் வீட்டை விட்டு வெளியே வரும்போது ரோட்டில் யாரையும் கண்டால் அவருக்கு பிடிக்காது.
சைக்கிளுக்கு யாராவது காற்று அடைத்தால் அவருக்கு பிடிக்காது. உடனே தனது செல்வாக்கை பயன்படுத்தி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி போலீசை வரவழைத்து விடுவார்.
என்னைப் பற்றியும் 3 முறை போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசாரும் நேரில் வந்து என்னை சத்தம் போட்டார்கள். பின்னர் உண்மையையும், எனது நிலையையும் அறிந்து சென்று விட்டார்கள். எங்களுக்கு இது வாடிக்கையாகி விட்டது என்றார் பரிதாபமாக.
இவர் கூறுவது உண்மையாக இருந்தால் நடிகை ஷோபனா மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











