ரஜினியுடன் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது.. மீண்டும் வாய்ப்புக் கிடைத்தால் ஓகே தான்: ஸ்ரேயா ஓபன்!
சென்னை: கன்னடத்தில் உபேந்திரா நடித்துள்ள கப்ஜா திரைப்படம் மார்ச் 17ம் தேதி வெளியாகிறது.
ஆர். சந்துரு இயக்கியுள்ள இந்தப் படத்தில் உபேந்திரா, சுதிபா ஆகியோருடன் ஸ்ரேயாவும் நடித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற கப்ஜா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஸ்ரேயா கலந்துகொண்டார்.
அப்போது அவர் சிவாஜி திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்து மனம் திறந்து பேசினார்.

டோலிவுட் டூ கோலிவுட்
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. 2001ம் ஆண்டு தெலுங்கில் நடிகையாக அறிமுகமான ஸ்ரேயா, தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். ஆனாலும் தொடர்ந்து தெலுங்கில் இருந்து மட்டுமே ஸ்ரேயாவுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. அதன் பின்னர் 2006ல் தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார்.

ரஜினியுடன் சிவாஜி
யாருமே எதிர்பாராதவிதமாக திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் கமிட் ஆனார் ஸ்ரேயா. அதுவும் ஏவிஎம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினியுடன் டூயட் பாடி கோலிவுட்டின் கவனத்தை தன்பக்கம் திருப்பினார். அதன்பின்னர் விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரம் ஜோடியாக கந்தசாமி உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

சென்னையில் ஸ்ரேயா
கடந்தாண்டு ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது கன்னடத்தில் உபேந்திராவுடன் கப்ஜா படத்தில் லீடிங் கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கப்ஜா படத்தின் ப்ரோமோஷன் சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகை ஸ்ரேயாவும் கலந்துகொண்டார்.

ரஜினியுடன் நடித்த அனுபவம்
அப்போது அவர், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்த அனுபவத்தை மறக்கவே முடியாது என்றார். மேலும், ரஜினி மிகவும் எளிமையானவர். படப்பிடிப்பு அரங்கில் லைட் மேன் உள்பட அனைவருக்கும் வணக்கம் சொல்லுவார். எப்போதும் நல்ல காமெடியாக பேசும் அவருக்குத் தெரியாத விஷயமே கிடையாது. ரஜினியுடன் நடிக்க விரும்பாதவர் யாரும் இல்லை. எனக்கு மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க ஆசையுள்ளது. அப்படி வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் எனக் கூறினார்.

கப்ஜா படம் குறித்து ஸ்ரேயா
தொடர்ந்து பேசிய அவர், கப்ஜா திரைப்படம் பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார். இப்போதைய சினிமா மொழி எல்லைகளை கடந்து பான் இந்தியா படங்களாக வருகின்றன. நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்கு எல்லா மொழிகளிலும் வரவேற்பு கிடைக்கும். கப்ஜா நல்ல படம் 1942-ல் ஆரம்பிக்கும் கதை சுதந்திரத்துக்கு பிறகும் நடப்பதுபோல் படமாக்கப்பட்டுள்ளது என்றார்.

நல்ல வரவேற்பு கிடைக்கும்
மேலும், இந்தப் படத்தில் உபேந்திரா, சுதீப் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கப்ஜா படத்தில் இடம்பெற்ற சிவராத்திரி பாடல் சிறப்பாக வந்துள்ளது. இந்தப் பாடல் காட்சியில் நடித்தபோது தூசியால் சளித் தொல்லை, உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனாலும் கஷ்டப்பட்டு நடித்தேன். படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனக் கூறினார். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த அனுபவங்களுடன், மீண்டும் அவருடன் நடிக்க ஸ்ரேயா ஆர்வம் தெரிவித்துள்ளது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











