“தமிழகத்தில் என்ன நடக்கிறது எனத் தெரியாதா?”.. ஸ்ருதியின் ’ஹேப்பி’ பதிவால் ரசிகர்கள் கோபம்!
நடிகை ஸ்ருதி ஹாசனின் இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு அரசு விழாக்கள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசன், நேற்றிரவு 11.30 மணியளவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், 'இரண்டு நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுடன் வேலை பார்ப்பது மிகவும் ஜாலியாக இருக்கிறது' எனத் தெரிவித்திருந்தார். ஸ்ருதியின் இந்தப் பதிவைப் பார்த்து அவரது ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
'தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், இப்படி ஒரு பதிவு வெளியிடலாமா?' என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சமூகவலைதளங்கள் முழுவதையும் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுச் செய்திகளே ஆக்கிரமித்துள்ள நிலையில், ஸ்ருதிக்கு மட்டும் இது எப்படி தெரியாமல் போனது என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தப் பதிவினால் ஸ்ருதி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ஸ்ருதி வெளியிட்ட இந்தப் பதிவை இதுவரை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











