வசீகரா டூ CM விஜய்.. குடும்பத்தோடு முதலமைச்சரைச் சந்தித்த சினேகா!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர தம்பதிகளான சினேகா மற்றும் பிரசன்னா, தங்களது பிள்ளைகளுடன் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட நெகிழ்ச்சியான புகைப்படங்களை நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் எழுதியுள்ளார்.
இரண்டு மெகா ஹிட் படங்கள்: விஜய், சினேகா இருவரும் சேர்ந்து நடித்த வசீகரா திரைப்படம் இன்றளவும் ரசிகர்களுக்கு பிடித்தமான படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படத்தில், காதல் மற்றும் காமெடி குறிப்பாக 'ஒரு தடவை சொல்வாயா' என்ற பாடல் ஒரு மாஸ் வெற்றிப்பாடலாகும். இந்த படத்தில் விஜய்யின் சுட்டித்தனமான நடிப்புக்கு ஈடுகொடுத்து சினேகா தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அந்த படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'கோட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா மீண்டும் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஜோடியை திரையில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

சினேகா உருக்கம்: தன்னுடன் நடிகராக நடித்த விஜய்யை இன்று தமிழகத்தின் முதல்வராக பார்த்த உணர்வுப்பூர்வமானது என சினேகா உருக்கமாக பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்த பின், அந்தத் தருணங்கள் குறித்து சினேகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், விஜய் சாருடன் இரண்டு படங்களில் பணியாற்றியுள்ள நிலையில், இன்று அவரை 'முதல்வர் ஜோசப் விஜய்' என்ற புதிய அந்தஸ்தில் காண்பது மிகுந்த நெகிழ்ச்சியையும் உணர்வுப்பூர்வமான அனுபவத்தையும் தருகிறது. சில தருணங்கள் நம்மை வார்த்தையற்றுப் போகச் செய்துவிடுகின்றன.

அவரது அரசியல் பயணம், அபார வளர்ச்சி மற்றும் அவர் மக்கள் மத்தியில் சம்பாதித்துள்ள மரியாதை ஆகியவை உண்மையிலேயே அனைவருக்கும் ஊக்கமளிப்பவை. இருப்பினும், என்னை மிகவும் நெகிழ வைக்கும் விஷயம் என்னவென்றால், எனக்குத் தெரிந்த அதே எளிமையான, அன்பான மற்றும் பண்பான மனிதராக இப்போதும் அவர் அப்படியே இருப்பதுதான். அவருக்கு எப்போதும் வலிமையும் வெற்றியும் கிடைக்க மனதார வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
கியூட் போட்டோஸ்: சினேகா பகிர்ந்துள்ள புகைப்படங்களில், முதலமைச்சர் விஜய் சினேகா-பிரசன்னா தம்பதியின் குழந்தைகளான விஹான் மற்றும் ஆத்யந்தாவை மிகவும் பாசத்தோடு அணைத்துக் கொண்டு சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்துள்ளார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தாலும், தன்னை சந்திக்க வந்த சக கலைஞரின் குடும்பத்தாரிடம் வழக்கம் போலத் தனது எளிமையைக் காட்டிய விஜய்யின் இந்தப் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் தளபதி ரசிகர்களால் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications