சப்பாணின்னு சொன்னா.. சப்புன்னு அறைஞ்சுரு.. உச்சம் தொட்ட பெண் சூப்பர் ஸ்டார்.. மறக்க முடியாத ஸ்ரீதேவி
சென்னை: நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
நடிகை ஸ்ரீதேவி 1963-ஆம் ஆண்டு சிவகாசியில் உள்ள மீனாம்பட்டி கிராமத்தில் பிறந்தார். இவர் தனது 4 வயதில் கந்தன் கருணை படத்தில் முருகன் வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ரீதேவி. 1976-ஆம் ஆண்டு மூன்று முடிச்சு என்ற படத்தில் தனது 13 வயதில் கதாநாயகியாக அறிமுகமானார்.

ரஜினியுடன் அதிக படங்கள்
இதைத் தொடர்ந்து உச்ச நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோருடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஜானி, பிரியா, காயத்ரி, தர்மயுத்தம், ராணுவ வீரன், போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா, அடுத்த வாரிசு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்திய சினிமாவில் ஸ்ரீதேவி அதிகப் படங்களில் சேர்ந்து நடித்தது ரஜினிகாந்துடன்தான்.

சிறந்த ஜோடி
கமல்ஹாசனுடனும் ஸ்ரீதேவி இணைந்து நடித்துள்ள படங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக பதினாறு வயதினிலே, வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, சிகப்பு ரோஜாக்கள், தாயில்லாமல் நானில்லை, கல்யாண ராமன், குரு, கோகிலா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கமலுக்கு சிறந்த ஜோடி என்ற பட்டியலில் ஸ்ரீபிரியாவுக்கு பிறகு நிச்சயம் ஸ்ரீதேவி இருப்பார்.

உச்சம் தொட்ட நடிகை
தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்ற அவர் அங்கேயும் வெற்றிக் கொடியை நாட்டினார். தெற்கில் இருந்து சென்று வடக்கில் உச்சம் தொட்ட தமிழ் நடிகை என்ற பெருமைக்குரிய ஸ்ரீதேவி, இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார். நடிகை ஸ்ரீதேவி பாலிவுட் நடிகரான மிதுன் சக்கரவர்த்தியை முதலில் திருமணம் செய்தார். ஆனால் மிதுன் சக்ரவர்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தன.

இரண்டாவது மனைவி
இதனால் ஸ்ரீதேவியை மனைவியாக அறிவிக்க தயங்கினார். இதனை தொடர்ந்து மிதுன் சக்ரவர்த்தியை பிரிந்த ஸ்ரீதேவி, தன்னை வைத்து மிஸ்டர் இந்தியா படத்தை தயாரித்த தயாரிப்பாளரும் தனது தீவிர ரசிகருமான போனி கபூருடன் காதல் கொண்டார். 1996ஆம் ஆண்டு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த போனி கபூரை திருமணம் செய்து கொண்டு ஜான்வி, குஷி ஆகிய இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானார்.

மாரடைப்பால் மரணம்
கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பிப்ரவரி 24ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உடனிருந்தார்.
Recommended Video

தொடரும் சந்தேகம்
பாத்ரூமில் உள்ள குளியல் டப்பில் விழுந்து ஸ்ரீதேவி இறந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. ஸ்ரீதேவி மரணித்து 2 ஆண்டுகள் கடந்து விட்டது. இன்னமும் ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவே கருதுகின்றனர் அவரது ரசிகர்கள். தேசிய விருது, பல மாநில அரசுகளின் விருது, நந்தி விருது, பிலிம்ஃபேர் விருது என ஏராளமான விருதுகளை குவித்துள்ள ஸ்ரீதேவிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை கொடுத்து கவுரவித்தது. மாம் படத்திற்காக, இறந்த பிறகு தேசிய விருதினை பெற்றார் ஸ்ரீதேவி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











