Sukanya: ஓராண்டில் கசந்த திருமண வாழ்க்கை.. மறுமணம் குறித்து சுகன்யா மனம் திறந்த பேட்டி!
சென்னை: Sukanya நடிகை சுகன்யா இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்து பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய பல நடிகைகளில் நடிகை சுகன்யாவும் ஒருவர். அழகு, திறமை, அமைதி என அனைத்தும் இருந்தும் ஆரவாரமில்லாமல் தமிழ் சினிமாவில் அதிரடி காட்டியவர் நடிகை சுகன்யா.

இவர் பல வெற்றிப்படங்களில் நடித்து இன்றும் ரசிகர்களின் மனதில் சிறந்த நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
நடிகை சுகன்யா: இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் புது நெல்லு புது நாத்து படத்தில், கருத்த மாச்சன் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான் என்ற ஒற்றை பாடலிலேயே தமிழ் ஆடியன்ஸின் மனதில் நச் என்று ஒட்டிக்கொண்ட சுகன்யா, கமல், விஜய்காந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு என அடுத்தடுத்த முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.
மாபெரும் வெற்றி: நடிகை சுகன்யா விஜயகாந்த் உடன் இணைந்து நடித்த சின்ன கவுண்டர் படம் வரலாறு காணாத அளவு மிகப்பெரிய வெற்றியடைந்து கிட்டத்தட்ட 250 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை செய்தது. இப்படம் விஜயகாந்த் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படி அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து இன்று வரை முன்னணி நடிகையாகவே இருக்கிறார்.
கணவரை பிரிந்தார்: நடிகை சுகன்யா 2002ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். ஆனால் திருமணமாகி ஒரே ஆண்டில் அவரைவிட்டு பிரிந்து விவாகரத்து பெற்றார். அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
இரண்டாவது திருமணமா: இந்நிலையில், நடிகை சுகன்யா இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், கணவருடனான என் திருமண வாழ்க்கை சரியாக இல்லாததால் நான் விவாகரத்து பெற்றுவிட்டேன். ஆனால், சில பெண்கள் இந்த சமூகத்திற்காக பயந்து சகித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள், இதனால் தான், பல தற்கொலைகள் நடக்கின்றன.
சமூகத்தை எதிர்க்க துணிவு இருந்தால் நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம். என் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது. நான் விவாகரத்துக்கு விண்ணப்பித்து பல ஆண்டுகள் கழித்து, அண்மையில் தான் எனக்கு விவாகரத்து கிடைத்தது.

மனதில் சில குழப்பம்: அதே போல இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறதா என்று பலர் கேட்கிறார்கள். மறுமணம் செய்துகொள்ளும் எண்ணம் இதுவரைக்கும் எனக்கு வந்தது இல்லை. அதற்காக மறுமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றும் சொல்லவில்லை. இப்போது எனக்கு 50 வயதாகி விட்டது, இதற்கு பிறகு திருமணம் செய்து, குழந்தை பிறந்தால் அந்த குழந்தை என்னை அம்மா என்று கூப்பிடுமா? அல்லது பாட்டி என்று கூப்பிடுமா? என்று குழப்பமாக இருக்கிறது.
வாழ்வில் நமக்கு ஒரு துணை வேண்டும் என்பது அவசியமான ஒன்று, எனவே மறுமணம் செய்வேனா? இல்லையா? என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியாது. என் வாழ்வில் என்ன நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறதோ அது நிச்சயம் நடக்கும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











