கோவிலுக்கு எந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா... காண குவிந்த மக்கள்!
சென்னை: தமிழ் நாட்டிலேயே முதன்முறையாக அருப்புக்கோட்டையில் 3 மீட்டர் உயரமும், 800 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கஜா என்ற எந்திர யானை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த யானையை நடிகை திரிஷா தொண்டு நிறுவனத்தின் மூலம் அந்த கோயிலுக்கு வழங்கியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில், ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வவிநாயகம் திருக்கோயில் மட்டும் ஸ்ரீ அஷ்ட புஜ ஆதிசேஷ வாராஹி அம்மன் கோயில் அமைந்துள்ளது. வன விலங்குகளை பாதுகாக்கும் விதமாகவும், கோவிலில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் வகையிலும், கோவில்களில் யானைகள் பக்தர்களை தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும். பக்தியை வளர்க்கும் விதமாகவும் நடிகை திரிஷா கிருஷ்ணன் மற்றும் 'people for cattle in india' இணைந்து அன்பளிப்பாக ரூபாய் 6 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள கஜா என்ற எந்திர யானை வழங்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று மீட்டர் உயரமும் 800 கிலோ எடையில் பிரம்மாண்டமாக இந்த யானை உருவாக்கப்பட்டது.

எந்திர யானை: இந்த யானை சக்கரங்கள் மூலம் வீதி உலா செல்லும் வகையிலும், அதன் காதுகள், துதிக்கைகள், தலை அனைத்தும் அசையும் வகையில் தத்ரூபமாக உண்மையான யானை போன்றே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த யானை பக்தர்கள் மீது தண்ணீரை பீச்சி அடிக்கும் வகையிலும் வடிவமைத்துள்ளனர். எந்திர யானையின் அறிமுக விழா நிகழ்ச்சியில் மங்கள வாத்தியம், செண்டை மேளங்கள் முழங்க நடந்த அறிமுக நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் கலந்து கொண்டு புதிய யானையை அறிமுகம் செய்துவைத்தனர்.
வியந்த பக்தர்கள்: மேலும், பொதுமக்கள், பக்தர்கள் அனைவரும் இணைந்து மலர் தூவி இந்த பிரம்மாண்ட யானையை வரவேற்றனர். இந்த எந்திர யானைக்கு தீபாராதனையும் நடைபெற்றது. இந்த யானை பார்ப்பதற்கு பொதுமக்களை கவர்ந்திருக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. தந்தங்கள், கண்கள் காதுகள் என அனைத்துமே தத்ரூபமாக யானை போன்றே உள்ளது. இந்த அறிமுக நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு யானை வரவேற்றனர். வன விலங்கான யானை துன்புறுத்தாமல், தமிழகத்திலேயே முதன் முறையாக இது போன்று இயந்திர யானை அருப்புக்கோட்டை கோவிலுக்கு வழங்கியது இது தான் முதல் முறையாகும். அறிமுக நிகழ்ச்சிகளுக்கு பின், அருப்புக்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக யானை ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது. இதில், யானை அங்கும் இங்கும் சென்று பக்தர்கள் மீது தண்ணீரை தன் தும்பிக்கையால் பாய்ச்சி அடித்தது. இந்த காட்சி அப்பகுதி பொதுமக்களும், பக்தர்களும் ஆர்வத்துடனும் கண்டு வியந்து மகிழ்ந்தனர்.
மற்ற கோவில்களிலும்: கர்நாடகா, ஆந்திரா போன்ற ஊர்களில் இதுபோன்ற இயந்திர யானையை கோவில்களில் பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் முதல் முறையாக இதுபோன்ற எந்திர யானை கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கோவில் நிர்வாகிகள் இப்படி ஒரு யானை வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், நடிகை திரிஷா கிருஷ்ணன் மற்றும் 'people for cattle in india' இணைந்து இந்த யானை வழங்கி இருக்கிறோம். இதே போல, மற்ற கோவில்களிலும் எந்திர யானை பயன்படுத்திவிட்டு, அந்த யானைகளை வன காப்பகத்தில் விட்டால் நன்றாக இருக்கும் என்றனர்.


Click it and Unblock the Notifications











