என்னா உருட்டு உருட்டுனாங்க.. எல்லாரும் கப்சிப்.. லியோ படப்பிடிப்பு தள போட்டோவை வெளியிட்ட திரிஷா!
சென்னை : லியோ படத்தில் இருந்து திரிஷா விலகிவிட்டதாக செய்திகள் காட்டுத்தீ போல பரவிய நிலையில், படப்பிடிப்பு தளத்திலிருந்து போட்டோவை வெளியிட்டுள்ளார் திரிஷா.
திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இந்த படத்தில் குந்தவையாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. அதேபோல சதுரங்க வேட்டை2 , தி ரோட், ராம், லியோ ஆகிய படங்களும் வெளியாக உள்ளது.

லியோ படத்தில்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய்யுடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளார். லியோ படத்தின் பூஜையின் போது இருவரும் இருந்த க்யூட்டான புகைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இப்படத்தில், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், சாண்டி, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

படத்திலிருந்து விலகினார்
லியோ படத்தின் ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் சென்ற திரிஷா மூன்று நாட்களிலேயே சென்னை திரும்பினார். படப்பிடிப்புக்கு போன வேகத்திலேயே திரிஷா மீண்டும் சென்னை திரும்பியதால், திரிஷா லியோ படத்திலிருந்து விலகி விட்டதாகவும், லோகேஷூக்கும் திரிஷாவுக்கும் பிரச்சனை என்றும் பலவிதமான வதந்திகள் பரவின.

ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ
இந்நிலையில் நடிகை திரிஷா லியோ படத்தின் ஷூட்டிங் நடக்கும் காஷ்மீரில் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் காஷ்மீர் ஆப்பிள் போல சும்மா ஜில்லுனு இருக்கிறார் திரிஷா. இந்த போட்டோ வெளியானதும் அவரின் தீவிர ரசிகர்கள் திரிஷா லியோ படத்திலிருந்து விலகி விட்டார், லோகேஷுக்கும் திரிஷாவுக்கும் சண்டை என, என்னா உருட்டு உருட்டுனாங்க, இன்னைக்கு எல்லாரும் கப்சிப் என கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

பான் இந்திய திரைப்படம்
லியோ திரைப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் பான் இந்திய படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்ற அறிவித்துள்ளதால், லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உடனடியாக நீக்கப்படும்
நேற்று லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக்கானதால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால்,படப்பிடிப்பு தளத்தில் யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வீடியோவா, புகைப்படமோ வெளியானால், அது உடனடியாக நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய ஏற்பாட்டையும் படக்குழு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











