Trisha :நந்தினி கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்ட த்ரிஷா.. மறுத்த மணிரத்னம்!
சென்னை : நடிகை த்ரிஷாவின் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது.
த்ரிஷா தன்னுடைய 40வது பிறந்தநாளையும் வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார். அனைத்து தரப்பினரின் வாழ்த்துமழையில் நனைந்துள்ளார்.
பொன்னியின் செல்வன் 2 படத்தில் அவரது குந்தவை கேரக்டர் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதில் அவரது ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

த்ரிஷா நடிக்க விரும்பிய நந்தினி கேரக்டர் : நடிகை த்ரிஷாவின் கேரியரில் சாமி படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து, விஜய், அஜித், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் த்ரிஷா. தற்போது தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்த போதிலும் தன்னுடைய பிட்னசையும் அழகையும் மிகவும் சிறப்பாக பராமரித்து வருகிறார். ரசிகர்களையும் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறார்.
அவரது அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் அவரது ரசிகர்களுக்கு தொடர்ந்து உற்சாகத்தை கொடுத்து வருகின்றன. விஜய் சேதுபதியுடன் த்ரிஷா நடித்திருந்த 96 படம் அவருக்கு மிகச்சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், அடுத்தடுத்த படங்கள் அவரது நடிப்புக்கு தீனி போடும்வகையில் அமைந்து வருகின்றன. குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரு பாகங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் படம் ரசிகர்களை கட்டிப் போட்ட நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் 2 படமும் சிற்பபாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் த்ரிஷா நடித்துள்ளார். படத்தின் ஆணிவேறாக இந்தக் கேரக்டர் அமைந்துள்ளது. சோழ சாம்ராஜ்யத்தை கட்டிக் காக்கும் இந்தக் கேரக்டருக்கு த்ரிஷாவின் நடை, உடை பாவனைகள் அனைத்தும் சிறப்பாக பொருந்தியுள்ளன.

இந்தக் கேரக்டருக்காக கிலோ கணக்கில் நகைகளை அணிந்து நடித்திருந்தார் த்ரிஷா. இதற்காக பயன்படுத்தப்பட்ட ஆபரணங்கள், உடைகள் உள்ளிட்டவற்றின் ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோவையும் படக்குழுவினர் முன்னதாக வெளியிட்டிருந்தனர். மாடர்ன் உடைகளில் வலம்வந்து ரசிகர்களை கவர்ந்த த்ரிஷாவை இதுபோன்ற வரலாற்று பின்னணியில் பார்ப்பதே ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனிடையே தனது சமீபத்திய பேட்டியில் த்ரிஷா நந்தினி கேரக்டர் குறித்து பேசியுள்ளார்.
இதனிடையே, தான் முதலில் மணிரத்னம் அலுவலகத்திற்கு சென்றபோது, நந்தினி கேரக்டரை தனக்கு வழங்குமாறு அவரிடம் கேட்டதாகவும் ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும், அதற்கான தேர்வு தான் முதலில் செய்யப்பட்டதாக அவர் கூறியதாகவும் த்ரிஷா தெரிவித்துள்ளார். மேலும் அந்தக் கேரக்டரை ஐஸ்வர்யா ராய் மட்டுமே செய்ய முடியும் என்று அவர் தெரிவித்ததாகவும் த்ரிஷா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











