Actress Urvasi: ஊர்வசியின் 700-வது படம்.. கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் அப்பத்தா!
சென்னை: நடிகை ஊர்வசி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பிசியான நாயகியாக இருந்தவர்.
தற்போதும் சினிமாவில் நடித்துவரும் ஊர்வசிக்கு தமிழில் முந்தானை முடிச்சு படம் அறிமுகப் படமாக அமைந்தது.

தொடர்ந்து கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவரும் ஊர்வசி, உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்துவதில் சிறந்தவராக காணப்படுகிறார்.
நடிகை ஊர்வசி: நடிகை ஊர்வசி தன்னுடைய 10வது வயதிலேயே நடிப்பு பயணத்தை துவங்கியவர். மலையாளத்தில் கதிர் மண்டபம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கிய ஊர்வசி, தமிழில் முந்தானை முடிச்சு படத்தில் பாக்கியராஜிற்கு ஜோடியாக 13 வயதில் நடித்துவிட்டார். முன்னதாக டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் இவர் செயல்பட்டுள்ளார். தன்னுடைய 10 வயதில் சினிமா பயணத்தை துவங்கிய ஊர்வசி, தற்போது வரை அதை தொடர்ந்து வருகிறார்.
700 படங்களில் நடித்த ஊர்வசி: தமிழில் முதல் படத்திலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக கலக்கியவர் ஊர்வசி தற்போது 700 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். அவரது 700வது படம் அப்பத்தா. பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஞாயிற்றுக்கிழமை கலர்ஸ் தமிழ் டிவியில் மூவி ஆப் தி மன்த் திரைப்படமாக ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக ஒளிபரப்பாகவுள்ளது.
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அப்பத்தா படம்: வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இந்தப் படம் ஒளிப்பரப்பாக உள்ளது. ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். காயிலான் பட்டி என்ற கிராமத்தில் வாழ்ந்துவரும் அப்பத்தா என்ற கண்ணம்மா, தன்னுடைய கணவனின் மறைவிற்கு பிறகு தன்னந்தனியாக போராடி தன்னுடைய மகனை வளர்க்கிறார். உறுதியான மற்றும் அச்சமில்லாத போக்கை கொண்டவரான கண்ணம்மாவிற்கு நாய்களை கண்டால் மட்டும் பயம் என்று காட்டப்படுகிறது.
நாய் குறித்த பயம்: இதனிடையே, தன்னுடைய கிராமத்தில் இருந்து சென்னையில் உள்ள தன்னுடைய மகனின் வீட்டிற்கு வரும் அப்பத்தா, தன்னுடைய மகனின் குடும்பம் வெளியூருக்கு செல்லும்போது அவர் வளர்த்துவரும் ஜூயஸ் என்ற நாயை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்கிறார். தொடர்ச்சியான சில சம்பவங்களுக்கு பிறகு நாயும் கண்ணம்மாவும் பிரிக்க முடியாத பிணைப்பில் ஒற்றுமையாகி விடுவதாக கதைக்களம் காணப்படுகிறது. இந்தப் படத்தில் ஊர்வசியுடன் அருள்தாஸ், அமித் பார்கவ், காவேரி ஜா, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
அச்சங்களை எதிர்கொள்வதன் அவசியம்: தன்னுடைய 700வது படமான அப்பத்தா தனக்கு அசாதாரண அனுபவமாக அமைந்ததாக ஊர்வசி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படம் தன்னுடைய இதயத்தில் தனி இடத்தை பிடித்துள்ளதாகவும் அச்சங்களை எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தை இந்தப் படம் அழகாக எடுத்துக் காட்டியுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரியதர்ஷன் தலைமையிலான டீமுடன் இணைந்து பணியாற்றியது குறித்தும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டைரக்டர் பிரியதர்ஷன்: மேலும் படம் குறித்து பேசிய இயக்குநர் பிரியதர்ஷன், இந்த இதயப்பூர்வமான கதையை திரையில் கொண்டுவந்தது குறித்து தான் பெருமையாக உணர்வதாக தெரிவித்துள்ளார். கண்ணம்மா தன்னுடைய மகனுடன் இணைவது மற்றும் நாய்கள் மீதான பயத்தை எதிர்கொள்வது போன்றவற்றை இந்தப் படத்தில் கதைக்களமாக கொண்டுள்ளது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உணர்வுகளின் ஆழத்தை கலர்ஸ் தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்தின்மூலம் பெருவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











