ரஜினியா இருந்தா என்ன.. கமலா இருந்தா என்ன.. எனக்கு கொள்கைதான் முக்கியம்.. நடிக்க மறுத்த நடிகை!
சென்னை: கருப்பு வெள்ளை காலத்தில் சினிமாவுக்கு வந்த உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் நடிகராக இருக்கிறார்கள் இவர்களின் படத்தில் எப்படியாவது ஒரு காட்சியில் வந்தால் போதும் என பலரும் தவம் கிடக்கும் நிலையில், பிரபல நடிகை இருவருடன் நடிக்க அழைத்த போதும் மறுத்துள்ளார்.
அது வேறுயாரும் இல்லை 90 வயதை கடந்த பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா தான். இவர் 1949ம் ஆண்டு வாழ்க்கை படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். இதைத் தொடர்ந்து இரும்புத்திரை, பார்த்திபன் கனவு,தேன் நிலவு, பாக்தாத் திருடன், சித்தூத் ராணி பத்மினி போன்ற காலத்தால் அழியாத பல படங்களில் நடித்துள்ளார். வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வரும் கண்ணும் கண்ணும் கலந்து உள்ளம் கொண்டாடுதே பாடலுக்கு பத்மினியுடன் இணைந்து அவர் ஆடிய நடனத்தை நாள் எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கலாம். அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பழம் பெரும் நடிகை வைஜெயந்தி மாலா: சென்னையிள் பிறந்து வளர்ந்த வைஜெயந்தி மாலா, சினிமாவை தாண்டி அரசியலிலும் ஜொலித்தார். மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் எம்.பி.யாக பணியாற்றினார். பின்னர் அரசியல், சினிமா என இரண்டில் இருந்தும் ஒதுங்கிவிட்டார்.
நிராகரித்த நடிகை: இந்நிலையில், நடிகை வைஜெயந்தி மாலாவை, ரஜினிகாந்த் நடித்த மாப்பிள்ளை படத்தில் ரஜினிக்கு மாமியாராக நடிக்கவைக்க கேட்ட போது அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். அதன் பின் தான் அந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீவித்யா நடித்திருந்தார். அதன் பின் கமல் விஸ்வரூபம் 2 படத்தில் நடிக்க அவரது வீட்டிற்கே சென்று பேசி இருக்கிறார். ஆனால் முடியவே முடியாது என கூறிவிட்டாராம்.
எவ்வளவு பணம் கொடுத்தாலும் இவரை நடிக்க வைக்க முடியாது என ரஜினியே என்னை பற்றி கூறுவார், அந்த அளவுக்கு கொள்கையில் உறுதியாக இருப்பவர் நான் என வைஜெயந்தி மாலா ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். பல நடிகர், நடிகைகள் இவர்களுடன் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்று இருக்கும் போது, இவர் கெத்தாக முடியவே முடியாது என்று சொல்லியது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
90 வயதில் நடனம்: நடிகை வைஜெயந்தி மாலா அண்மையில் அயோத்தி ராமர்கோவில் திறப்பு விழாவில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பரதநாட்டியம் ஆடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 90 வயதில், இவராடிய நடனத்தை நடனக் கலைஞர்கள் கண்டு ரசித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.


Click it and Unblock the Notifications











