தகிக்கும் விலைவாசி உயர்வு, இதுல தியேட்டர் டிக்கெட் விலை உயர்வு கோரிக்கை வேற: ரசிகர்கள் ஏற்பார்களா?
சென்னை: கொரோனா காலங்களில் திரையரங்குகளின் நிலை என்னவாகும் என்ற மிகப் பெரிய கேள்வி சினிமா ஆர்வலர்களிடம் எழுந்தது.
அதேநேரம் ஓடிடி தளங்களின் வளர்ச்சிக்குப் பிறகும் திரையரங்குகளில் படம் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சினிமா ரசிகர்களின் போதி மரம்
உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் முதன்மையான பொழுதுப்போக்கு திரைப்படங்கள் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்துகள் இருக்க முடியாது. மொழிகளையும் எல்லைகளையும் கடந்து அனைவரையும் வசீகரிக்கும் தன்மை சினிமாவிற்கு உண்டு. அதற்கு மிகப் பெரிய பலமாக அமைவது திரையரங்குகள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் திரையரங்குகளை ரசிகர்கள் அவர்களின் போதி மரமாக கொண்டாடுகின்றனர்.

சிதைந்துப் போன திரையரங்குகள்
தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் எண்ணிலடங்கா திரையரங்குகள் இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் மல்டிபிளக்ஸ் ஸ்கீரின்கள் அதிகரித்தன. இதனால், பார்க்கிங் கட்டணம், தியேட்டரில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், கூல்ட்ரிங்ஸ் என எல்லாமே விலை அதிகரித்தன. இது சாமனியர்களுக்கு சாத்தியமில்லாமல் போனதால், திரையரங்குகளில் கூட்டம் குறைந்தது. இதன் காரணமாக, தமிழகம் உட்பட பல பகுதிகளிலும் அதிகமான திரையரங்குகள் திருமண மண்டபடங்களாக மாறின. இன்னொருபக்கம் தமிழ் ராக்கர்ஸ் போன்ற திருட்டு பைரசியும் திரையுலகை அச்சுறுத்தின.

கொரோனாவுக்கு முன்னும் பின்னும்
ஏற்கனவே விலைவாசி உயர்வு, பார்க்கிங் கட்டணம் போன்றவைகளால் மக்கள் தியேட்டர் பக்கம் செல்லாமல் இருந்த நிலையில், கொரோனாவுக்குப் பின்னர் எல்லாமே தலைகீழானது. ஆனால், கொரோனாவுக்குப் பின்னர் விஜய்யின் மாஸ்டர், சிவகார்த்திகேயனின் டாக்டர், சிம்புவின் மாநாடு, அல்லு அர்ஜுனின் புஷ்பா போன்ற படங்கள் மக்களை தியேட்டர்களுக்கு வரவைத்தன.

ஓடிடி தளங்கள் ஏற்படுத்திய தாக்கம்
இதனிடையே கொரோனா ஊரடங்கு நேரங்களில், அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள், இந்தியத் திரையுலகை மொத்தமாக ஆக்கிரமித்தன. பெரிய ஹீரோக்கள் முதல் சிறு பட்ஜெட் படங்கள் வரை, எல்லாம் ஓடிடியை நோக்கிப் படையெடுத்தன. இந்தாண்டு தேசிய விருதுகளை வென்ற ‘சூரரைப் போற்று', ‘மண்டேலா', ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' என 3 படங்களுமே ஓடிடிகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை
இந்நிலையில், டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே பார்க்கிங் கட்டணம், ஸ்நாக்ஸ் விலைவாசி போன்றவைகளால் நடுத்தர குடும்பத்தினர் நல்ல படங்களுக்காக மட்டுமே திரையரங்குகளுக்கு செல்லும் நிலை காணப்படுகிறது. ஆனால், மீண்டும் டிக்கெட் கட்டணம் உயர்ந்தால், தியேட்டர்களின் நிலை இன்னும் மோசமாகும் என சொல்லப்படுகிறது.

நடிகர்கள் மீது விமர்சனம்
இதனிடையே, சினிமாத் துறையினர் எப்படியாவது கொள்ளை லாபம் பார்க்க ஆசைப்படுவதாகவும், இதனால் கந்துவட்டிக்கு கடன் வாங்கி ஃபைனான்சியர்களை ஊக்குவிப்பதுடன், நடிகர்களுக்கும் கோடிகளில் சம்பளம் கொடுப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. நாயகர்களையும் நாயகிகளையும் கோடிகளில் குளிப்பாட்டிவிடும் சினிமாத்துறை, மக்களின் நிலை குறித்து யோசிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. டிக்கெட் கட்டணம், பார்க்கிங் டோக்கன், அதிகவிலைக்கு ஸ்நாக்ஸ் என பயங்கர கொள்ளை அடிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அதேபோல் நடிகர்களும் அவர்கள் சம்பாதித்தால் போதும், ரசிகர்களின் பொருளாதாரம் குறித்து சிந்திப்பதேயில்லை என சொல்லப்படுகிறது.
Recommended Video

பாதிக்கப்போகும் சிறுபட்ஜெட் படங்கள்
திரையரங்குகளில் வெளியாகும் முன்னணி ஹீரோக்களின் படங்களே சில நேரங்களில் காத்து வாங்குகின்றன. இந்த நிலையில், சின்ன பட்ஜெட் படங்களின் நிலையை யோசித்தால் பரிதாபமாக உள்ளது. டிக்கெட் கட்டணம் உயர்ந்தால், வசூலை பற்றியெல்லாம் யோசிக்காமல், படம் வெளியானால் போதும் என, சிறு பட்ஜெட் படங்கள் ஓடிடிகளுக்கு செல்ல நேரிடும் என சொல்லப்படுகிறது. அதேபோல் மக்களும் ஓடிடியில் பொறுமையாக பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











