குட் பேட் அக்லி டைட்டில்.. அஜித்தான் சொன்னார்.. மனம் திறந்த ஆதிக் ரவிச்சந்திரன்
சென்னை: குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. விடாமுயற்சி படம் சரியாக போகாததால் இந்தப் படத்தின் மீது தங்களது ஒட்டுமொத்த நம்பிக்கையையும் ஏகேவின் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். படத்தின் டீசரும், சிங்கிளும் பெரும்பாலானவர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் இந்த மாத இறுதிக்குள் ட்ரெய்லரும் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் ஆதிக் ரவிச்சந்திரன் அளித்திருக்கும் பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது. முக்கியமாக அவரது ரசிகர்களிடமே படம் எடுபடவில்லை. அதற்கு ஒரே காரணம் தங்களது ஏகேவை அவர்களால் மாஸ் சீன்கள் இல்லாத ஒரு படத்தில் பார்க்க முடியவில்லை என்பதுதான். ஆனால் மிகப்பெரிய இமேஜ் உடைய ஒரு ஹீரோ இந்த மாதிரியான கதையம்சம் கொண்ட படத்தில் நடித்ததை ஒருதரப்பினர் வரவேற்றார்கள். அதேசமயம் திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் இயக்குநர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்றும் பேசினார்கள்.

குட் பேட் அக்லி அஜித்: விடாமுயற்சி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகிவிட்டார் அஜித். அந்தப் படத்துக்கு உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறி விண்டேஜ் அஜித்தாக உருமாறி நின்றார். அந்த ஸ்டில்களை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்றார்கள். மேலும் ஆதிக் அடிப்படையில் அஜித்தின் வெறித்தனமான ரசிகர் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் அருமையாக இருக்கும் நம்ப தொடங்கினார்கள்.
நம்பிக்கை பொய்க்கவில்லை: அவர்களது நம்பிக்கைக்கு பலம் சேர்க்கும் விதமாக படத்தின் டீசர் அமைந்திருந்தது. சில வாரங்களுக்கு முன்பு வெளியான அந்த டீசர் அனைவரையும் கவர்ந்துவிட்டது. முழுக்க முழுக்க ஆக்ஷன், மாஸ் சீன்களால் படத்தை ஆதிக் கட்டமைத்திருக்கிறார் என்பது டீசரை பார்க்கையில் உறுதியானது. அதேபோல் சில நாட்களுக்கு முன்பு படத்தின் முதல் சிங்கிளான ஓஜி சம்பவம் ரிலீஸானது. டீசர் போல் இல்லாவிட்டாலும் பாடல் ஓரளவுக்கு நல்ல வரவேற்பைதான் பெற்றிருக்கிறது. இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் மனம் திறந்து படம் குறித்து பேசியிருக்கிறார்.

ஆதிக் ரவிச்சந்திரனின் பேட்டி: அவர் அந்தப் பேட்டியில் பேசுகையில், "குட் பேட் அக்லி ஆகிய மூன்று கேரக்டர்கள் அனைவருக்குள்ளுமே இருக்கும். இந்த உலகம் நம்மிடம் நன்றாக நடந்துகொள்ளும்போது நாம் குட்டாக இருப்போம். பேடாக நடக்கும்போது அக்லியாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதுதான் இந்தப் படத்துடைய ஒன்லைன். இது வெறும் ஆக்ஷன் படமாக மட்டுமில்லாமல் எமோஷன் கலந்திருக்கும் படமாகவும் இருக்கும். அப்பா - மகனுக்கிடையேயான எமோஷன் ரசிகர்களிடம் நன்றாக ஒர்க் அவுட் ஆகும் என்று நம்புகிறேன். இந்தப் படத்துக்கான டைட்டிலை அஜித்தான் கொடுத்தார். அவர் இந்த பெயரை கொடுத்தது ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
பல கெட்டப்புகளில் வருவார்: இந்தப் படத்தில் பில்லா, தீனா படங்களின் கெட்டப்புகளில் அஜித் வருவார். கடுமையான டயட்டை இந்தப் படத்துக்காக கடைபிடித்தார். அவர் ரெட் டிராகன் என்கிற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். ஒரு நடிகராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் அவர் செய்திருக்கிறார்.இந்தக் கதாபாத்திரத்தை அவரிடம் சொன்னதுமே ஓகே சொல்லிவிட்டார். அவரை போல் மன உறுதி கொண்ட நபரை பார்ப்பது அரிது. விடாமுயற்சி ஷூட்டிங்கிலிருந்து நேராக இந்த பட ஷூட்டிங்கிற்கு வருவார். வரும் வழியில் மட்டும்தான் தூங்குவார். அப்படித்தான் அவர் 72 நாட்களில் இந்தப் படத்தை நடித்துக்கொடுத்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











