நிச்சயம் படம் இயக்குவேன்.. பிரபல நடிகர் திட்ட வட்டம்.. எதனால இந்த திடீர் முடிவு?
மும்பை: பாலிவுட் ஹீரோ ஆதித்யா ராய் கபூர், விரைவில் இயக்குநராவேன் என தெரிவித்துள்ளார்.
ஆஷிக் 2 படத்தில் நடித்து, இந்திய அளவில் பிரபலமானவர் ஆதித்யா ராய் கபூர். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மலங் திரைப்படம், தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
பாலிவுட்டின் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வரும் ஆதித்யா ராய் கபூர், விரைவிலேயே இயக்குநராகும் திட்டத்தை தீட்டி வருகிறார்.

திஷா படானியுடன்
காதலர் தினத்தை முன்னிட்டு ஆதித்யா ராய் கபூர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி மலங் திரைப்படம் பாலிவுட்டில் ரிலீசானது. இந்த படத்தில் ஆதித்யா ராய் கபூருக்கு ஜோடியாக திஷா படானி நடித்திருந்தார். பிகினி, ஆடை குறைப்பு என கவர்ச்சியில் தாராளம் காட்டி இளைஞர்கள் மனதை கொள்ளை அடித்தார்.

வீடியோ ஜாக்கி
பாலிவுட்டின் இளம் முன்னணி ஹீரோவாக வலம் வரும் ஆதித்யா ராய் கபூர், வி சேனலில் வீடியோ ஜாக்கியாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கினார். பின்னர், 2009ம் ஆண்டு வெளியான லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் அறிமுகமானார். ஹிரித்திக் ரோஷனின் குஜாரிஷ் படத்தில் துணை நடிகராக நடித்திருந்தார்.

ஆஷிக் 2
ஆதித்யா ராய் கபூருக்கு, பாலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பையும், வெற்றியையும் கொடுத்த படம் என்றால், அது 2013ல் வெளியான ஆஷிக் 2 படம் தான். ஆதித்யா ராய் கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூருக்கு இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்து, பல விருதுகளையும் பெற்றுத் தந்தது.

ஏக் வில்லன் 2
ஓகே ஜானு, கலன்க், மலங் என தொடர்ந்து பெரிய வெற்றி படங்களில் நடித்து வரும் ஆதித்யா ராய் கபூர், அடுத்ததாக ஏக் வில்லன் 2ம் பாகத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். மேலும், அவர் நடிப்பில், லூடோ மற்றும் சதாக் 2 படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

தயாரிப்பாளர்
ஆதித்யா ராய் கபூரின் அண்ணன், சித்தார்த் ராய் கபூர், பாலிவுட்டில் தயாரிப்பாளராக பல பெரிய படங்களை தயாரித்து வருகிறார். அண்ணனை போல, தயாரிப்பு பணியில் தனக்கு ஆர்வம் இல்லை என்றும், நடிப்பை தாண்டி சினிமாவில் வேறு எதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது என்றும், மலங் படத்தின் வெற்றி விழாவில் ஆதித்யா பேசியுள்ளார்.

இயக்குநர் ஆவேன்
மேலும், ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் போது, இயக்குநர்களின் பணி தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும், நிச்சயம் ஒரு நாள் தானும் ஒரு பாலிவுட் படத்தை இயக்குவேன் என்றும் கூறியுள்ளார். ஆனால், தன்னை இயக்கத் தூண்டும் அளவுக்கு ஒரு கதை அமையாத வரை, அந்த பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











