விஜய் கூட்டத்தில் ஒருவர் பலி.. பனையூர் வரச்சொல்லி நஷ்ட ஈடு தருவார்.. விளாசிய ப்ளூ சட்டை மாறன்
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். அதனையடுத்து மக்களை சந்திக்க கரூருக்கு சென்றபோது அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தார்கள். அந்த துயர சம்பவத்துக்கு விஜய்யின் தாமதமான வருகை, கூட்டத்துக்கு செய்த ஏற்பாட்டில் தவெகவினரின் அலட்சியம்தான் காரணம் என பலரும் சொன்னார்கள். அதிலிருந்து அடுத்தடுத்த கூட்டங்களில் இதுபோன்ற துயர சம்பவம் நடக்காதபடி தவெகவினர் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்று பார்த்தால்; இன்று சேலத்தில் நடந்த விஜய் கூட்டத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியிருக்கும் விஜய்; 'உங்கள் விஜய் நா வரேன்' என்கிற பெயரில் கடந்த வருடத்தில் மக்களை சந்திக்க தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அந்தவகையில் கரூருக்கும் சென்றார். ஆனால் கரூரில் சொன்ன நேரத்தை விடவும் மிக மிக தாமதமாக சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்தக் கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அது இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பின. விஜய் மற்றும் தவெகவினரின் அலட்சியம்தான் முழு காரணம் என பலரும் சொன்னார்கள்.
சிபிஐ விசாரணை: இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. அண்மையில்கூட விஜய்யை நேரில் டெல்லிக்கு வரவழைத்து விசாரணையை நடத்தியது. அதில் அதிகாரிகள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அவர் பதிலளித்ததார். கரூர் துயர சம்பவம் போன்று இனிமேலும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது விஜய் மற்றும் தவெகவினரின் பொறுப்பு என்பதுதான் அத்தனை பேரின் கருத்தாக இருந்தது.

நேரில் வரவழைத்து ஆறுதல்: கரூர் சம்பவம் விஜய்க்கு பெரிய கரும்புள்ளியை ஏற்படுத்திவிட்டது. அதுமட்டுமின்றி அந்த சம்பவம் நடந்த பிறகு அவர் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் இருந்ததும் பெரிய கண்டனத்தை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து அவர்களை மாமல்லபுரத்துக்கு நேரில் வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார். உங்களுக்கு துணையாக இருப்பேன் என உறுதியும் கொடுத்தார். உலக வரலாற்றிலேயே பாதிக்கப்பட்டவர்களை தான் இருக்கும் இடத்துக்கு வரவழைத்து ஆறுதல் தெரிவித்தது விஜய்தான் என அவரை கிழித்து தொங்கவிட்டார்கள் அவருக்கு எதிர் தரப்பினர்.
சேலத்திலும் ஒருவர் பலி: சூழல் இப்படி இருக்க இனிமேலும் தவெக நடத்தும் கூட்டத்தில் இதுபோன்ற அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக்கொள்வார்கள் என்றே பலரும் கருதினார்கள். ஆனால் இன்று சேலத்தில் நடந்த விஜய்யின் கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் என்ற இளைஞர் மூன்று மணி நேரம் வெயிலில் தொடர்ந்து நின்றதன் காரணமாக மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.
ப்ளூ சட்டை மாறன் விளாசல்: கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு அமர்வதற்கோ, வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்வதற்கோ எந்த வசதியையும் செய்யாமல் விட்டதுதான் இந்த பலிக்கு காரணமாக கருதப்படுகிறது. கூட்டம் நடத்துபவர்கள் இந்த அடிப்படை விஷயத்தைகூட தெரிந்துகொள்ளாமல் மீண்டும் மீண்டும் தவறு செய்வார்கள்; விஜய்க்கு அரசியலே வேண்டாம் என்று அவரை விளாச தொங்கிவிட்டார்கள். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து, "மதிய வெயிலில்.. பந்தல் போடாமல்.. மேலும் ஒரு உயிரிழப்பு. இவரது வீட்டாரையும் பனையூர் வரசொல்லி நஷ்ட ஈடு தருவார் போல" என்று பதிவிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











