Atlee: அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய அட்லீ.. நெல்சன், லோகேஷை பின்னுக்கு தள்ளி சாதனை!
சென்னை: நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 7ம் தேதி ஜவான் படம் ரிலீசாகியுள்ளது.
இந்தப் படத்தை பிரபல கோலிவுட் இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார். இதன்மூலம் அவர் பாலிவுட்டிலும் தன்னுடைய என்ட்ரியை கொடுத்துள்ளார்.
பல படங்களின் கலவையாக உள்ளதாக கமெண்ட்ஸ் வாங்கியுள்ள போதிலும் படம் தொடர்ந்து வசூல் மழையை பொழிந்து வருகிறது.

ஜவான் வெற்றியை தொடர்ந்து அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய அட்லீ: நடிகர் ஷாருக்கான் தொடர்ந்து 4 ஆண்டுகள் தன்னுடைய சொந்த பிரச்சினைகளால் படங்களில் நடிக்காமல் தன்னுடைய ரசிகர்களுக்கு வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்து வந்தார். இந்நிலையில் அதற்கெல்லாம் ஈடுசெய்யும் வகையில் இந்த ஆண்டிலேயே அவரது அடுத்தடுத்தப் படங்கள் வெளியாகியுள்ளன. இரண்டுமே சூப்பர் ஹிட்டாகியுள்ளன. கடந்த ஜனவரியில் வெளியான பதான் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்து 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.
தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் கடந்த 7ம் தேதி வெளியான ஜவான் படமும் சர்வதேச அளவில் மிகச்சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வருகிறது. இந்தப் படத்தின்மூலம் அட்லீ மட்டுமில்லாமல் நயன்தாரா, அனிருத் ஆகியோரும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளனர். இவர்களுடன் விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியா மணி உள்ளிட்டவர்களும் முன்னணி கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் ஜவான் படம் சிறப்பான வசூலை குவித்து வருகிறது.
குறிப்பாக வட இந்திய ரசிகர்களை இந்தப் படம் வெகுவாக கவர்ந்துள்ளது. ட்ரெயின் உள்ளிட்ட காட்சிகள் இந்தப் படத்தில் மிகுந்த பாராட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளன. என்றபோதிலும் இந்தப் படத்தில் 10 படங்களின் காட்சிகளை இணைத்து அட்லீ கூட்டாக கொடுத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்தப் படத்தின் பீவர் தமிழ்நாட்டில் குறைந்த நிலையிலும் வட இந்திய ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் கண்டிப்பாக 1000 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தப்படத்தின்மூலம் இயக்குநர் அட்லீயின் மார்க்கெட் பாலிவுட்டில் உச்சத்திற்கு சென்றுள்ளது. அடுத்ததாக அவர் விஜய்யின் தளபதி 69 படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாலிவுட்டில், அடுத்ததாக கரண் ஜோஹரின் தயாரிப்பில் தன்னுடைய அடுத்தப் படத்திற்கான அட்வான்சை அட்லீ பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அடுத்தப்படத்தில் விஜய்யை இயக்குவாரா அல்லது கரண் ஜோஹரின் விருப்பத்திற்குரிய ஹீரோவை இயக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே ஜவான் படத்தின் அதிரடியான வெற்றியை தொடர்ந்து அட்லீயின் சம்பளம் 60 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கரண் ஜோஹரிடம் அவர் 60 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் தன்னுடைய குருநாதர் ஷங்கரையே அட்லீ ஓரம்கட்டியுள்ளார். முன்னதாக 50 கோடி ரூபாய் சம்பளம் பெற்றவர் என்ற பெருமைக்கு உரியவராக ஷங்கர் இருந்தார்.
விஜய்யின் லியோ படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெயிலர் என்ற மாஸ் ஹிட் கொடுத்துள்ள நெல்சன் திலீப்குமார் ஆகியோருக்கும் 25 மற்றும் 10 கோடி ரூபாய்கள் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே படத்தின்மூலம் தன்னுடைய மார்க்கெட்டை அதிகமாக உயர்த்தியுள்ளார் அட்லீ. இதற்காக அவர் 4 ஆண்டுகளை முழுமையாக கடந்துள்ள நிலையில் அதிகமான மெனக்கெடல்கள் இல்லாமலேயே அவர் இந்த உயரத்தை எட்டியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











