கடைக்குட்டி சிங்கத்தைத் தொடர்ந்து விவசாயத்தைப் பேசும் மற்றொரு படம்.. ‘பூமராங்’!
அதர்வா நடித்துள்ள பூமராங் திரைப்படம் விவசாயத்தைப் பற்றி பேசுகிறது.
சென்னை: விவசாயத்தைப் பற்றி பேசும் மற்றொரு படமாக உருவாகி இருக்கிறது அதர்வாவின் பூமராங்.
மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பூமராங்'. ரதன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
படத்தின் இசை தகட்டினை கலைப்புலி எஸ் தாணு, சத்யஜோதி தியாகராஜன் வெளியிட, சுஹாசினி மணிரத்னம் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். முன்னதாக இயக்குனர் மணிரத்னம் படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை வாழ்த்தினார்.

7 படங்கள்:
விழா மேடையில் பேசிய இயக்குநர் ஆர்.கண்ணன், "2008ல் ஜெயங்கொண்டான் ரிலீஸ் ஆகியது, 2018ல் இன்று பூமராங். இதுவரை மொத்தம் 7 படங்கள் இயக்கியிருக்கிறேன்.

திருப்புமுனை:
என் குரு மணிரத்னம் அவர்களை அறிமுகப்படுத்திய சத்யஜோதி தியாகராஜன், எனக்கு முதல் பட வாய்ப்பை கொடுத்தது பெருமையான விஷயம். சுஹாசினி அவர்களை சந்தித்தது தான் என் வாழ்வின் திருப்புமுனை.

விவசாயம் பேசும் படம்:
கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு பிறகு விவசாயத்தை பற்றிய ஒரு படம் பூமராங். 130 கோடி மக்கள் இருந்தும் நஷ்டத்தில் போகிற ஒரு துறை விவசாய துறை தான். அதை படம் பேசும்.

நட்புக்கு மரியாதை:
நட்புக்கு மரியாதை கொடுக்கும் மனிதர் சமுத்திரகனி. அவருடன் என் நட்பு வாழ்நாள் முழுக்க தொடர ஆசை. வழக்கமான பாம்பே நாயகியாக இல்லாமல் சென்னை அண்ணா நகர் பெண்ணை நாயகியாக நடிக்க வைத்திருக்கிறோம்.

கருத்து சொல்லும் படம்:
இசையமைப்பாளர் ரதன் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார். இது கமர்சியல் படமாகவும், நல்ல கருத்தை சொல்லும் படமாகவும் இருக்கும்" எனத் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர்கள்:
இந்த விழாவில் நாயகி மேகா ஆகாஷ், தயாரிப்பாளர் கதிரேசன், ஞானவேல்ராஜா, ராம் பிரசாத், இயக்குனர் ஆர் கே சரவணன், முருகேசன், ஈரோடு கலெக்டர் அழகிரி, ஒளிப்பதிவாளர் பிரசன்ன எஸ் குமார், கலை இயக்குனர் சிவ யாதவ், எடிட்டர் செல்வா, வெங்கட் சுபா ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.


Click it and Unblock the Notifications











