அப்பவே இனி டூயட் பாடக்கூடாது என முடிவுசெய்தேன்.. தர்பார் நிகழ்ச்சியில் மனம் திறந்த ரஜினி!
சென்னை: இனி டூயட் பாடக்கூடாது என்று லிங்கா படத்திற்கு பிறகு முடிவு செய்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பலரும் பல சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது பல்வேறு சுவாரசிய தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

பூங்காவுக்கு என் பெயர்
அவர் பேசியதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் ஒரு பூங்காவிற்கு என் பெயர் வைக்க வேண்டும் என சுபாஷ்கரன் சொன்னார். நான் உயிரோடு இருக்கும் போது இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் வேண்டாம் என்றேன்.

தள்ளிப்போய்விட்டது
ரமணா படம் பார்த்தபோதே முருகதாஸை எனக்குப் பிடித்துவிட்டது. கஜினி முடித்ததும் அவரும் நானும் படம் பண்ண பேச்சுவார்த்தை நடந்தது. ஆனாலும் தள்ளிப்போய்விட்டது.

டூயட் வேண்டாம்
நான் 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படம் ஸ்டைலாக, த்ரில்லாக இருக்கும். லிங்கா படத்தின் போதே வயசாகிவிட்டது இனி டூயட் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்து கபாலி, காலா படங்களில் நடிக்கத் தொடங்கினேன்.

நயன்தாரா கிளாமர்
பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் 90களில் இருந்தது போல் காட்டவேண்டும் என்றார். தர்பார் படத்தின் ஆதித்யா அருணாசலம் கேரக்டர் ரொம்பவே பவர்ஃபுல். நயன்தாரா, சந்திரமுகியை காட்டிலும் கிளாமராகவும் எனர்ஜியாகவும் இருக்கிறார்.

அனிருத்துக்கு பக்குவம்
இசையமைப்பாளர்களில் இளையராஜாவிற்கு நிகரான இசை ஞானம் படைத்தவர்கள் யாரும் கிடையாது. இளையராஜா எப்படி ஒரு படத்தின் காட்சியைச் சோர்வு இல்லாமல் கொண்டு செல்வாரோ? அதேபோல பக்குவம் அனிருத்துக்கு வந்துவிட்டது. அனிருத் நம்ம வீட்டு குழந்தை. அவர் வளர்ச்சியைப் பார்த்து பெருமையாக உள்ளது.

ஆடம்பரம் வேண்டாம்
டிசம்பர் 12 முக்கியமான பிறந்தநாள். வழக்கம்போல் அன்றைய தினம் நான் ஊரில் இருக்க மாட்டேன். நான், 69-ல் இருந்து 70 அடியெடுத்து வைக்கிறேன். ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். தேவையானவர்களுக்கு உதவி செய்யுங்கள் இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.


Click it and Unblock the Notifications











