கமல் கேட்ட மீன்குழம்பு.. சமாளித்த மயில்சாமி.. இணையத்தில் வெளியான சுவாரஸ்ய சம்பவம்!
சென்னை : கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார் நடிகர் மயில்சாமி.
வாழும் வரையில் அனைவருக்கும் பிடித்தமானவராக இருந்தவர் நடிகர் மயில்சாமி.
இவரது இறப்பை அடுத்து, அவர் எப்படி அனைவரையும் தன்னுடைய நடிப்பாலும் இயல்பு வாழ்க்கையிலும் கவர்ந்தார் என்பது குறித்த பல்வேறு சுவாரஸ்யங்கள் வெளியாகி வருகின்றன.

நடிகர் மயில்சாமி
நடிகர் மயில்சாமி தாவணி கனவுகள் படத்தில் துவங்கிய தன்னுடைய திரைப்பயணத்தை தான் வாழும் காலம் வரையில் தொடர்ந்தவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார் மயில்சாமி. தன்னுடைய 57வது வயதிலேயே அவர் உயிரிழந்த நிலையில், அவரது இறப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

எம்ஜிஆர் ரசிகர்
தீவிர எம்ஜிஆர் ரசிகராக இருந்த மயில்சாமி, தன்னுடைய காரின் முன்பகுதியில் எம்ஜிஆர் புகைப்படத்தையும் பின்பகுதியில் எம்ஜிஆர் என்ற பெயரையும் பொறித்திருந்தார். தன்னுடைய சம்பளத்தில் எம்ஜிஆர் டாலர் செய்து அதை தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த மயில்சாமி, சுனாமி பாதிப்பின்போது அதை நிவாரணத்திற்காக கழற்றி கொடுத்துவிட்டார்.

மயில்சாமியின் உதவி மனப்பான்மை
தான் வாழும் வரையில், இல்லை என்று வருபவர்கள் அனைவருக்கும் உதவி செய்வதையே ஒரே நோக்கமாக கொண்டு வாழ்ந்தவர் மயில்சாமி. லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றாலும் அதை உதவி கேட்டு வருபவர்களுக்காக கொடுத்துவிட்டு, வீட்டிற்கு 5 ஆயிரம் மட்டுமே எடுத்து செல்வாராம்.

மயில்சாமி வீட்டு மீன்குழம்பு
இத்தகைய பல குணநலன்களை மயில்சாமி கொண்டிருந்த நிலையில், அவரது வீட்டு மீன்குழம்பு கமல் மற்றும் ரஜினி இருவருக்கும் மிகவும் பிடிக்கும் என்பதால் அடிக்கடி செய்து கொண்டு அவர்களிடம் கொடுப்பாராம். அப்படி இருக்கையில் ஒருமுறை, கமல், தனக்கு மீன்குழம்பு வேண்டும் என்று தொலைபேசியில் கூறிவிட்டு போனை வைத்துவிட்டாராம்.

சமாளித்த மயில்சாமி
அந்த நேரத்தில் மயில்சாமியின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், மீன்குழம்பு வைக்க முடியாத நிலை ஏற்பட, தன்னுடைய வீட்டின் பாத்திரத்தை எடுத்துச் சென்று பிரபல ஹோட்டலில் மீன்குழம்பு வாங்கி அதை கமலிடம் கொடுத்தாராம் மயில்சாமி. அதை சாப்பிட்ட கமல், அந்த ஹோட்டலின் பெயரை சொல்லி, மீன் குழம்பு பிரமாதம் என்றாராம்.

சுவாரஸ்ய சம்பவங்கள்
இதுபோன்ற பல சுவாரஸ்ய சம்பவங்கள் கமல் மற்றும் மயில்சாமி இடையில் நடைபெற்றுள்ளதாக தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன. தன்னுடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததை கூறாமல், மெனக்கெட்டு, ஹோட்டலில் வாங்கிக்கொண்டு சென்று கமலிடம் கொடுத்த மயில்சாமியின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications