Vijay Antony - மகள் இறப்பிலிருந்து மெல்ல மீளும் விஜய் ஆண்டனி.. மீண்டும் ஷூட்டிங்கிலா?
சென்னை: Vijay Antony (விஜய் ஆண்டனி) மகள் இறப்பிலிருந்து மெல்ல மீண்டுவரும் விஜய் ஆண்டனி மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், படத்தொகுப்பாளர் என்று பல முகங்களை கொண்டவர். பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கியிருந்த அவர் கடைசியாக கொலை படத்தில் நடித்திருந்தார்.

மீரா தற்கொலை: விஜய் ஆண்டனிக்கு மீரா, லாரா என்ற இரண்டு மகள் இருந்தார்கள். அவர்களில் மீரா 12ஆம் வகுப்பு படித்துவந்தார். அவர் கடந்த ஒரு ஆண்டாக மன உளைச்சலில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை எடுத்துவந்ததாகவும் கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க கடந்த வாரம் அதிகாலை மீரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை விஜய் ஆண்டனியை உடைந்து போக செய்திருக்கிறது.
மீரா உடல் நல்லடக்கம்: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மீராவின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு டிடிகே சாலையில் இருக்கும் விஜய் ஆண்டனி வீட்டில் வைக்கப்பட்டது. அங்கு திரையுலக பிரபலங்கள் முதல் பொதுமக்கள்வரை அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தி விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறினர். ஆறுதல் கூறிய அவர்கள் என்னதான் ஆறுதல் சொன்னாலும் மகளை இழந்த அவர் எதை கொண்டு இனி தேறி வருவார் என்று சோகத்துடன் கூறவும் செய்தனர்.
அறிக்கை: தனது மகள் இறப்பு குறித்து விஜய் ஆண்டனி, "அன்பு நெஞ்சங்களே என் மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகத்தைவிட சிறந்த சாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்துக்கு சென்றிருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவளது பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்" என தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
மீண்டும் ஷூட்டிங்கில்?: இந்நிலையில் மகள் மீரா இழப்பிலிருந்து விஜய் ஆண்டனி எப்படியாவது மீண்டு வந்துவிட வேண்டும் என ரசிகர்களும், திரைத்துறையினரும் கூறிவந்தனர். சூழல் இப்படி இருக்க அவர் தற்போது மெல்ல மெல்ல மீண்டு கொண்டிருப்பதாகவும் ஏற்கனவே புதுமுக இயக்குநர் சொன்ன கதைக்கு ஓகே சொல்லியிருந்தார். அதற்கான ஷூட்டிங் பெங்களூரில் தொடங்கியிருப்பதாகவும் அதில் பங்கேற்றிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











