தமிழ்நாடு அரசு விருது.. ஒரு விருது கூட இல்லை.. வேதனையா இருக்கு.. கைதி பட சிறுமி ஓபன் டாக்
சென்னை: தமிழ் திரைப்பட துறையில் 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட்ட கலைஞர்களுக்கு சமீபத்தில் விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால் வழங்கப்பட்ட விருதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று பா.இரஞ்சித் உள்ளிட்டோர் ஓபனாக கூறியிருந்தார்கள். இந்நிலையில் கைதி படத்தில் நடித்த சிறுமி மோனிகாவும் தனக்கு விருது வழங்கப்படாத்து தொடர்பாக வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையில் சிறந்து பணியாற்றிய கலைஞர்களுக்கும், சிறந்த படங்களுக்கும் சமீபத்தில் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகர்களாக விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபுவும், சிறந்த நடிகைகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல், சாய் பல்லவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
வருத்தத்தை பதிவு செய்த கலைஞர்கள்: அதேபோல் சிறந்த படங்கள், சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டன. சின்னத்திரை கலைஞர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டன. பிப்ரவரி 13ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் விழாவில் இவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது வாங்கியவர்கள் தங்களது நன்றியை தெரிவித்துவருகிறார்கள். அதேசமயம் இந்த விருதுகள் நியாயமான முறையில் வழங்கப்படவில்லை என்றும் வருத்தத்தை பதிவு செய்பவர்களும் இருக்கிறார்கள்.

பா.இரஞ்சித்: முக்கியமாக சார்பட்டா பரம்பரை திரைப்படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்படாதது, எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது வழங்காதது என பல விஷயங்கள் விமர்சனங்களை சந்தித்திருக்கின்றன. விருது அறிவிக்கப்பட்ட நாளிலேயே இயக்குநர் பா.இரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதேபோல் சின்னத்திரை நடிகை லட்சுமி, குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த் ஆகியோரும் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தார்கள்.
கைதி மோனிகா: அவர்கள் வரிசையில் கைதி படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த மோனிகாவும் சேர்ந்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "அனைவருக்கும் வணக்கம், நேற்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைப் பார்த்தேன். ஐந்து வயதிலிருந்தே நான் திரைப்படத் துறையில் நடித்து வருகிறேன். 2016 முதல் 2022 வரை, இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். அவற்றில் பல திரைப்படங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு, கொண்டாடப்பட்டன. சில திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தாலும், நான் நடித்த பல கதாபாத்திரங்கள் நினைவில் நிற்கக்கூடியவையாக இருந்தன.
கேள்வி எழுகிறது: மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் என்னால் இயன்ற சிறந்த முயற்சியையும் நான் வழங்கியுள்ளேன். கைதி, ராட்சசன், கனா, ஆண் தேவதை, சங்குசக்கரம் போன்ற திரைப்படங்களில் பிரதானமும் முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். இருப்பினும், தற்பொழுது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும், சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றவர்கள். அத்தகைய அங்கீகாரத்தை அளிக்கும் அளவிற்கான வேடத்தில் நடிக்கவில்லையோ என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.
ஏற்றுக்கொள்ள முடியவில்லை: இந்த விஷயத்தை நான் எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக முன்வைக்கவில்லை. இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படவில்லை என்றால். இதைப் பற்றி பேச வேண்டும் என்று நான் எண்ணியிருப்பேனா என்பது எனக்கே தெரியாது. அந்த காலகட்டத்தில் என்னைப் போலவே பல குழந்தை நடிகர்கள் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடையே பாராட்டைப் பெற்றிருந்தனர். அவர்களில் யாருக்காவது இந்த விருது வழங்கப்பட்டிருந்தால், அது தகுதியான ஒருவருக்கு வழங்கப்பட்டதாக நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால், தற்போதைய நிலையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மதிப்பு குறைகிறது: முக்கியமாக, இது தனிநபர்கள் அல்லது ஒரு தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும் விருது அல்ல. யாரோ ஒருவரின் பரிந்துரையாலோ அல்லது செல்வாக்கினாலோ வழங்கப்படும் விருதாகவும் இல்லை. இது அரசால் வழங்கப்படும் மாநில விருது. உண்மையான நிறமையைப் பாராட்டும். ஒவ்வொரு நடிகருக்கும் மிக முக்கியமான ஒரு பெருமைமிக்க அங்கீகாரம். அந்த அங்கீகாரம் பெற வேண்டியவர்களுக்கு கிடைக்காமல் போகும் போது, அது மனதிற்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. உண்மையில், இந்த விஷயத்தை கேள்வி எழுப்பி பேசுவது என் உரிமை என்றே நான் கருதுகிறேன். இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும்போது. விருதுகளின் மீது உள்ள நம்பிக்கையும் மதிப்பும் மெதுவாக குறைந்து விடுகிறது.
இந்த விஷயத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் மற்றும் இத்துறை சார்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தேர்வுக்குழுவினர் கவனத்தில் கொண்டு, உரிய முறையில் பரிசீலிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











