பா. ரஞ்சித் படம் முடிந்த உடனே மாரி செல்வராஜ் படம்.. சியான் விக்ரம் போடும் மாஸ்டர் பிளான்!
சென்னை: பொன்னியின் செல்வன் 2, தங்கலான், துருவ நட்சத்திரம் என அடுத்தடுத்து 3 பெரிய படங்கள் சியான் விக்ரமின் லைன் அப்பில் உள்ளன.
இதில், துருவ நட்சத்திரம் மற்றும் பொன்னியின் செல்வன் 2 ஷூட்டிங் முடிந்து படம் ரிலீசுக்கு ரெடியாகி உள்ளன.
தங்கலான் படத்திற்காக தீவிரமாக உழைத்து வரும் சியான் விக்ரம் அடுத்ததாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மிரட்டும் விக்ரம்
கடந்த ஆண்டு மகான், பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்து தனது அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டிய சியான் விக்ரம் இந்த ஆண்டும் ஆதித்த கரிகாலனாகவும் ஜான் ஆகவும் தங்கலான் ஆகவும் ரசிகர்களை பிரம்மிக்க வைக்க காத்திருக்கிறார். இந்த வயதிலும் ரிஸ்க் எடுப்பதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி தான் என வெறித்தனமாக சினிமாவுக்காக தனது உடல் பொருள் ஆவியை அர்பணித்து வருகிறார்.

ஆதித்த கரிகாலனின் மரணம்
பொன்னியின் செல்வன் நாவலே ஆதித்த கரிகாலனின் மரணத்தை முன் வைத்துத் தான் உருவாக்கப்பட்டது என்பது அந்த நாவலை படித்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். மூத்த மகன் ஆதித்த கரிகாலன் இறந்ததும் மணிமகுடம் பொன்னியின் செல்வனான அருள்மொழி வர்மனுக்கு வர அவர் அதை ஏற்றாரா? இல்லை யாருக்கு கொடுத்தார் என்பது தான் பொன்னியின் செல்வன் 2 கிளைமேக்ஸ்.

ஏப்ரல், மே விக்ரம் ஆட்சி
அடுத்த மாதம் ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாக உள்ள நிலையில், மே 19ம் தேதி கெளதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம், ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த துருவ நட்சத்திரம் படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த அந்த திரைப்படம் ஒருவழியாக ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி உள்ளது. ஜானாக மே மாதம் மிரட்ட காத்திருக்கிறார் விக்ரம்.

பா. ரஞ்சித் படம்
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் சியான் விக்ரம் இதுவரை இல்லாத அளவுக்கு நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த படத்தை உலகின் பல்வேறு மொழிகளில் டப் செய்து பான் வேர்ல்ட் படமாக ரிலீஸ் செய்ய ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ஞானவேல் ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில்
பா. ரஞ்சித் படத்தில் நடித்து வரும் சியான் விக்ரம் அடுத்ததாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாமன்னன் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், மாரி செல்வராஜ் அடுத்ததாக சியான் விக்ரம் படத்தை இயக்குவதற்கு முன் இன்னொரு படத்தை இயக்க உள்ளார் என்பது தான் இதில் ஹைலைட்.

துருவ் விக்ரம் படம் என்ன ஆச்சு
மாமன்னன் படத்தை முடித்து விட்டு வாழை எனும் படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார் மாரி செல்வராஜ். மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட துருவ் விக்ரம் படத்தை முடித்து விட்டுத்தான் சியான் விக்ரம் படத்தையே மாரி செல்வராஜ் இயக்கப் போகிறாராம். மகான் படம் போல அப்பாவையும் மகனையும் வைத்தே மாரி செல்வராஜ் இயக்கப் போகிறாரா? அல்லது இரண்டும் தனித் தனி படங்களா என்பது விரைவில் தெரிய வரும்.


Click it and Unblock the Notifications











