அடக்குமுறையால் மாணவர்களின் குரல்களை நசுக்குவது ஜனநாயகமாகாது – பிரியங்கா சோப்ரா
மும்பை: குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த மாணவர்களுக்கு ஆதரவு குரலாகவும், குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்தும் நாடு முழுவதும் பல கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் மற்றும் ஜாமியா பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர்களான ஷாருக்கான், ஆமீர்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இது குறித்து வாய் திறக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டி ஷேம் ஆன் பாலிவுட் ஹாஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது.
இந்நிலையில், சில பாலிவுட் நட்சத்திரங்கள் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். அதில், தற்போது பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் இணைந்துள்ளார்.

மெளனம் காக்கும் முன்னணி நடிகர்கள்
பாலிவுட் படங்களில் தேசத்தை காப்பாற்றவும், மாணவர்களை காப்பாற்றவும் தொடர்ந்து போராடி வரும் ரீல் ஹீரோக்கள், ரியலில் எந்தவொரு வார்த்தையும் இதுகுறித்து பேசாமல் மெளனம் காத்து வருகின்றனர். அமிதாப் பச்சன், ஷாரூக்கான், ஆமீர்கான், சல்மான் கான், அக்ஷய் குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இதுகுறித்து பேசாதது பாலிவுட் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய பிரபலங்கள்
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராகவும் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் நடிகர் சித்தார்த், கார்த்திக் சுப்பராஜ், பிரித்விராஜ், அமலா பால், பார்வதி, மம்மூட்டி, துல்கர் சல்மான், டோவினோ உள்ளிட்ட பல நடிகர்கள் தங்களின் குரலை எழுப்பியுள்ளனர்.

பாலிவுட்டில் யார் யார்
இயக்குநர் அனுராக் கஷ்யப், விக்கி கெளசல், பரிணித்தி சோப்ரா, மனோஜ் பாஜ்பாய், ஹுமா குரேஷி, புமி பெட்னேக்கர், ஆயுஷ்மான் குரானா, ஸ்வாரா பாஸ்கர், செளரப் சுக்லா, அலங்ரித ஸ்ரீவத்சவா, ஹன்சல் மேத்தா உள்ளிட்டோர் மாணவர்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளை தொடர்ந்து தட்டிக் கேட்டு வருகின்றனர்.
பிரியங்கா சோப்ரா ஆவேசம்
பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக நடித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, நேற்று இரவு இதுகுறித்து ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் கனவு, கல்வி கற்பதன் நோக்கமே அவர்கள் சுயமாக சிந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான். நாம் தான் மாணவர்களுக்கு வாழ்க்கையில் போராட கற்றுத் தரவேண்டும். ஆனால், மக்களுக்காக போராடும் மாணவர்களை அடக்குமுறையால் நசுக்குவது ஜனநாயகம் ஆகாது என தனது பதிவில் பிரியங்கா குறிப்பிட்டுள்ளார். பிரியங்கா சோப்ராவின் இந்த பதிவுக்கு பாலிவுட் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











