ரஜினி படங்களுக்குப் பிறகு மக்கள் குடும்பத்தோடு பார்ப்பது சூர்யா படத்தைத்தான்!- அமீர்

கரு பழனியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜன்னல் ஓரம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை கமலா திரையரங்கில் பிரமாண்டமாக நடந்தது.
இவ்வளவு திரைப்பட தயாரிப்பாளர்கள் பங்கேற்ற முதல் விழா என்று சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவின் பெரும்பாலான தயாரிப்பாளர்களை அழைத்து கவுரவப்படுத்தினர் இயக்குநர் கரு பழனியப்பனும் படத்தின் தயாரிப்பாளர் முருகனும்.
முன்னணி இயக்குநர்கள் பலரும் வந்து கரு பழனியப்பனை வாழ்த்தினர். நடிகர்கள் சூர்யா, விஷால் என நட்சத்திரங்களுக்கும் குறைவில்லை.
விழாவில் பேசிய இயக்குநர் அமீர், "இந்த மேடையே நன்றி சொல்லும் மேடை மாதிரிதான் தெரிகிறது. கரு பழனியப்பன் தன் முதல் தயாரிப்பாளர் தியாகராஜனை மேடை ஏற்றி நன்றியைக் காட்டினார். அடுத்து இயக்குநர்கள் எழில், பார்த்திபன் என மேடை ஏற்றிய விதம், நன்றியறிவிப்பு மாதிரிதான் தெரிந்தது.
நானும் இந்த இடத்தில் ஒருவருக்கு நன்றியைச் சொல்ல விரும்புகிறேன். அவர் சூர்யா.
ஒரு இயக்குநராக நான் இந்த மேடையில் நிற்கக் காரணமே சூர்யாதான். என்னை ஒரு இயக்குநர் என்று நம்பிய முதல் ஹீரோ அவர். மவுனம் பேசியதே படத்துக்குப் பிறகு நாங்கள் எந்த மேடையிலும் சந்தித்துக் கொண்டதில்லை.. சகஜமான பேச்சுவார்த்தையும் இல்லை. அதனால்தான் இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த மேடையில் நன்றி சொல்கிறேன்.
தமிழ் நாட்ல இன்றைக்கு ரஜினி சார் படங்களுக்குப் பிறகு மக்கள் குடும்பத்தோட பார்க்க விரும்புவது சூர்யாவோட படங்களைத்தான். இதை எந்த அளவுக்கு அவர் கவனிக்கிறார்னு எனக்குத் தெரியல. ஆனால் நான் இதை நேரில் பார்த்திருக்கிறேன்.
ஆனால் அவரோ தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் கவனம் செலுத்துகிறார். சூர்யாகிட்ட நான் கேட்டுக் கொள்வதெல்லாம், வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத இந்த சிறப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். குடும்பக் கதைகளிலும் நடித்து வேறு தளத்துக்கு அவர் செல்ல வேண்டும். ஏதோ நான் அவரிடம் கால்ஷீட் கேட்கப் போவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். கரு பழனியப்பனிடம் கூட ஒரு அற்புதமான கதை உள்ளது. சூர்யா அதையும் கேட்டால் நன்றாக இருக்கும்," என்றார்.
பருத்தி வீரன் படத் தயாரிப்பு காரணமாக சூர்யாவின் குடும்பத்துக்கும் அமீருக்கும் தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்தது. ஏகப்பட்ட பஞ்சாயத்துகள், வழக்குகளெல்லாம் நடந்தன. ஆனால், இப்போது சூர்யாவை வானளாவப் புகழ்ந்து, அந்த பகையை அமீரே முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











