சூப்பரா ஆரம்பித்து வைத்த சூர்யா குடும்பம்.. மற்ற சூப்பர்ஸ்டார்கள் எல்லாம் எப்போ கொடுக்கப் போறாங்க?
சென்னை: கொரோனா இரண்டாம் அலையால் நாடு முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சுமார் 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனா பரவலை தடுக்க முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில், நடிகர் சூர்யா குடும்பம் ஒரு கோடி ரூபாயை வழங்கி உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த
முதலமைச்சராக பதவியேற்ற ஸ்டாலின் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் முயற்சிகளை எடுத்து வருகிறார். 14 நாட்கள் லாக்டவுன், தற்காலிக மருத்துவமனைகள், ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகள் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

உதவி செய்யுங்க
மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், பொதுமக்களை பசி கொடுமையில் இருந்து காப்பாற்றவும் வசதி படைத்தவர்கள் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நிதி அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

பாலிவுட்டில்
பாலிவுட் நடிகர்கள் எல்லாம் கொரோனா பரவலை தடுக்க அரசுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். சில நடிகர்கள் அனுதினமும் சுயமாகவே மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். சோனு சூட், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, ஹூமா குரேஷி, அக்ஷய் குமார் என ஏகப்பட்ட பிரபலங்கள் முன்களப் பணியாளர்களாகவே இறங்கி வேலை செய்து வருகின்றனர்.

ஒரு கோடி நிதி
முதலமைச்சர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று நடிகர் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி உள்ளிட்டோர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாய் நிதியை கொரோனா நிவாரண பணிக்கு கொடுத்துள்ளனர். முன்னதாக முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் இந்த கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என நடிகர் சிவகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். மேலும், நடிகர் சூர்யாவும் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினி ரிட்டர்ன்ஸ்
ஹைதராபாத்தில் அண்ணாத்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நேற்று வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்றார். கடந்த ஆண்டு கொரோனா நிவாரண நிதிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நிவாரணம் வழங்கிய நிலையில், விரைவில் நிவாரண உதவிகளை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன செய்யப் போகிறார் விஜய்
கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் புதிதாக சென்னையில் தளபதி 65 படத்திற்கு போடப்பட்ட மால் செட் வேலைகளை நிறுத்தி வைக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள நடிகர் விஜய், கொரோனா நிவாரண நிதியுதவி வழங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வழக்கம் போல தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகவும் மக்களுக்கு நேரடியாக உதவும் பணிகளை தொடர்ந்து செய்வார் என தெரிகிறது.

உதவுவாரா அஜித்
கொரோனா பாதிப்பால் மக்கள் சிரமப்பட்டு வரும் சூழலில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் வலிமை ஃபர்ஸ்ட் லுக் ரிலீசையும் தவிர்த்துள்ள நடிகர் அஜித், முதலமைச்சர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று கொரோனா நிவாரண நிதியை வழங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டும் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், நடிகர் அஜித் நிவாரண உதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

மற்ற நடிகர்கள்
கொரோனா நிவாரண நிதிக்கு கடந்த ஆண்டு நடிகர் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, தனுஷ், ஜெயம் ரவி, ஹரிஷ் கல்யாண் என ஏகப்பட்ட நடிகர்களும் நடிகைகளும் முன் வந்து உதவி உள்ளனர். அதே போல இந்த ஆண்டும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற அனைவரும் மீண்டும் உதவி செய்ய முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுவர் இருந்தால் தான் சித்திரம்.. ரசிகர்கள் உயிரோடு இருந்தால் தான் சூப்பர் ஸ்டார்கள்!


Click it and Unblock the Notifications











