தியேட்டர் திறப்பு...உத்தரவு வந்ததுமே ரிலீசை அறிவிக்கும் படங்கள்
சென்னை : தமிழகத்தில் ஆகஸ்ட் 23 ம் தேதி முதல் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்ட சிறிது நேரத்திலேயே சில படங்களின் தயாரிப்பாளர்கள் தியேட்டர் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டனர்.
தமிழக அரசின் உத்தரவு வெளியானதுமே ரியோ ராஜ் நடித்துள்ள பிளான் பண்ணி பண்ணனும், விஜய் ஆன்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் ஆகிய படங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதை அறிவித்தன. அதோடு, தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்த தமிழக முதல்வருக்கு கோடியில் ஒருவன் நன்றி தெரிவித்து போஸ்டரும் வெளியிட்டது.

ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடித்துள்ள பிளான் பண்ணி பண்ணனும் படம் ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் சூழல் காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளதால் முதல் ஆளாக ரிலீசை அறிவித்து விட்டனர்.
பானா காத்தாடி, செம போத ஆகாதே படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். சென்சார் குழுவிடம் யூ சான்றிதழையும் இந்த படம் பெற்றுள்ளது. இந்த படத்தில் ரியோ ஐடி ஊழியராக நடித்துள்ளார். காமெடி பொழுதுபோக்கு படமான இந்த படத்தில் பாலா சரவணன், ரோபோ சங்கர், தங்கதுரை, நரேன், சந்தான பாரதி, எம்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் தியேட்டர் ரிலீஸ் பற்றி ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில், பிளான் பண்ணி தியேட்டருக்கு வர நாங்க ரெடி. நீங்க ரெடியா மக்களே என பதிவிட்டுள்ளார்.
இதே போல் ஆனந்த் கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் ஆன்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் படமும் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆன்டனி ஆசிரியராகவும், ஐஏஎஸ் ஆகும் கனவுடன் இருப்பவராகவும் நடித்துள்ளார்.
இந்த படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். அரசியல் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலரை சமீபத்தில் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். ஆக்ஷன், ரொமான்ஸ் கலந்த இந்த டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.


Click it and Unblock the Notifications











