பாலாவுக்கே அட்வைஸ் செய்த மாரி செல்வராஜ்.. அப்படி என்ன சொன்னாரு தெரியுமா?.. இவ்வளவு நெருக்கமா?
சென்னை: இயக்குநர் பாலா கடைசியாக வணங்கான் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அப்படம் பெரிய தோல்வியை சந்தித்தது. இனிமேல் அவர் திரைத்துறையில் வெல்வது கடினம் என்றெல்லாம் பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த படத்திலேயே அவர் கண்டிப்பாக கம்பேக் கொடுத்துவிடுவார் என்றுதான் அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள். இந்நிலையில் மை லார்ட் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பாலா பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பாலா தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். ஆனால் கடந்த சில வருடங்களாக ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். விக்ரமின் மகன் துருவ்வை வைத்து இயக்கிய வர்மா படத்தின்போது நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள், மனைவி மலருடனான பிரிவு, வணங்கான் படத்திலிருந்து சூர்யா வெளியேறியது என அவருக்கு தொடர்ந்து பாதகங்களே நடந்தன. ஆனாலும் அடிப்படையில் மன தைரியம் உள்ள அவர் இதையெல்லாம் கடந்து வந்தார்.
தோல்வி அடைந்த வணங்கான்: வணங்கான் படத்திலிருந்து சூர்யா வெளியேறியதைத் தொடர்ந்து உடனடியாக அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து அப்படத்தை இயக்கி முடித்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. வழக்கமான பாலா ஸ்டைலிலேயே படம் அமைந்துவிட்டது. அதேசமயம் நீண்ட வருடங்களாக நல்ல அங்கீகாரத்துக்காக போராடிக்கொண்டிருந்த அருண் விஜய்க்கு அப்படம் அதனை பெற்றுக்கொடுத்தது என்றே சொல்லலாம்.

அடுத்த படம் என்ன?: பொதுவாக ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் நீண்ட கேப் எடுக்கக்கூடியவர் அவர். அப்படித்தான் வணங்கான் முடித்த பிறகும் இருக்கிறார். ஆனால் அவர் சில தயாரிப்பாளர்களிடம் கதை சொன்னதாகவும்; அவர் மீது நம்பிக்கை இல்லாததால் தயாரிக்க யாரும் முன்வரவில்லை என்றும் ஒருதரப்பினர் சொல்கிறார்கள். இந்நிலையில் சசிகுமாரை வைத்து ராஜுமுருகன் இயக்கியிருக்கும் மை லார்ட் திரைப்படத்தின் விழாவில் நேற்று கலந்துகொண்டார் அவர்.
பாலா பேச்சு: அப்போது பேசிய அவர், "மணிரத்னத்தை பிடித்திருப்பதால் அவர் படத்தில் என்ன செய்தாலும் நமக்கு பிடித்துவிடும். அப்படித்தான் சசிகுமாரும் எனக்கும். அவர் என்ன செய்தாலும் எனக்கு பிடிக்கிறது. இதுதான் ஒரு குருவாக, ஒரு அண்ணனாக அவர் மீது எனக்கு இருக்கும் பாசம். ராஜுமுருகன் என்ன படம் எடுத்தாலும் அதை ரசிப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அதேசமயம் மை லார்ட் என்று பெயர் வைத்து கிண்டல் செய்வதற்கெல்லாம் தனி தைரியம் வேண்டும்.
மாரி செல்வராஜ் அட்வைஸ்: நான் மேடையேறும்போது, இங்கேயாவது இரண்டு நிமிடங்கள் கூடுதலாக பேசுங்கள் என மாரி செல்வராஜ் சொன்னார். தனிமையில் இருக்காதீர்கள்; நிறைய பேருடன் கலந்துரையாடி பேசுங்கள் என அவர் எனக்கு சொல்லியிருக்கிறார். அவர்தான் இப்போது எனக்கு வழிநடத்தி. இந்த நட்பு இப்படியே தொடரும் என்று நம்புகிறேன். அவர் ஒரு படத்தை பாராட்டினார் என்றால் அது தரமாக இருக்கும். அப்படித்தான் மை லார்டும் இருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











