Plane Crash: 240 பேரின் நிலை என்ன? விமான விபத்தால் மனமுடைந்த குஷ்பு.. இன்ஸ்டாகிராமில் வேதனை!
அகமதாபாத்: நாட்டையே உலுக்கியுள்ள சம்பவமாக மாறியுள்ளது அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்து. அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 ரக விமானம் விபத்துக்குள்ளானது மொத்த நாட்டையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தங்களது வருத்தத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
இன்று அதாவது ஜூன் 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட 3 நிமிடத்திற்கு உள்ளாகவே விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தாலும், அடுத்தடுத்து வரும் தகவல்கள் மக்களை மேலும் கவலைக்கு ஆளாக்கி வருகிறது. அதாவது விமானம் விபத்துக்குள்ளான இடம் என்பது விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதி. விமானம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதியின் மீது விழுந்துள்ளது. இதனால் விமானத்தில் பயணித்தவர்கள் மட்டுமல்லாமல், விடுதியில் தங்கியிருந்த சுமார் 50 முதல் 60 மாணவர்கள் வரை இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டு இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் விடுதியில் இருந்தவர்கள் என சுமார் 300 பேரின் நிலை என்ன எனற கேள்விக்கு இதுவரை விடை தெரியவில்லை.
குஷ்பு: இந்நிலையில் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் பகிர்ந்துள்ள விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஊழியர்கள் மற்றும் பயணிகள் என மொத்தம் 242 பேருடன் சென்று கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது. வாழ்க்கை எவ்வளவு பலவீனமாது மற்றும் கணிக்க முடியாதது. இந்த விபத்தில் காயங்களுடன் உயிர் பிழைத்தவர்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்திக்கிறேன். அதே நேரத்தில் இந்த விபத்தின் மூலம் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள்" என பதிவிட்டுள்ளார்.

கமல் - பவன் கல்யாண்: இந்த விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “ அகமதாபாத்தில் நடந்த விபத்து நாட்டையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும் நான் இதயப் பூர்வமாக உடன் நிற்கிறேன்” என பதிவிட்டுள்ளார். அதேபோல் ” அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமான விபத்தால் நான் மிகவும் வருத்தத்தில் உள்ளேன். விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என அனைவருக்கும்எனது மனமார்ந்த பிரார்த்தனைகள். அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக மக்கள் கனத்த மனத்துடன் , காத்திருக்கும் நேரத்தில் அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதட்டமான நேரத்தில் அவர்கள் பலத்தையும் ஆதரவையும் பெற வேண்டுகிறேன்" என நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யான் தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுன்: அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் ஏற்பட்ட துயர சம்பவம் மனதை உலுக்கி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். உண்மையிலேயே இந்த விபத்து மனதை வருத்துகிறது என நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











