வர வர காதல் கசக்குதய்யா… திரைப்பிரபலங்களின் விவாகரத்து அலப்பறைகள்!
சென்னை: திருமணம் என்பது மனித வாழ்வில் முக்கியமாகி விட்டதைப் போல, இன்றைய காலகட்டத்தில் விவாகரத்து என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
உருகி உருகி காதலித்து, நீ இல்லை என்றால் நான் இல்லை என்று வைரமுத்து போல கவிதை எழுதி, லவ் பேர்ட்ஸ் போல் சுற்றித்திரிந்த காதலர்கள். திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்ததும் காதல் தேய்ந்து கட்டெறும்பாகி விடுகிறது.

அப்படி காதலித்து திருமணம் செய்து கொண்ட திரைப்பிரபலங்கள் பலர் திடீரென திருமணத்தை முறித்து கொள்கின்றனர். அப்படி திரைப்பிரபலங்கள் சிலரின் விவாகரத்து அலப்பறையை தற்போது பார்க்கலாம்.
விவாகரத்து அலப்பறை: விவாகரத்து அலப்பறையில் முதல் இடத்தில் இருப்பது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் தான். 18 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்து வந்த இந்த தம்பதிகள் நாகசைத்தன்யா, சமந்தா பாணியில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே மாதிரி அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பது இதுநாள் வரை புரியாத புதிராகவே உள்ளது.

வர வர காதல் கசந்தய்யா: அதே போல சின்னத்திரை நட்சத்திரங்களான அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் இருவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில, திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமானார். கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் அர்னவ் அடித்து துன்புறுத்தியதாக திவ்யா சென்னை மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் அர்னவை கைது செய்த நிலையில் தற்போது அர்னவ் ஜாமீனில் உள்ளார். திவ்யா ஸ்ரீதருக்கு குழந்தை பிறந்த நிலையிலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான புகாரை கூறி வருகின்றனர்.
விவாகரத்து போட்டோஷூட்: சீரியல் நடிகை ஷாலினி ரியாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதல் கணவருக்காக மதம் மாறிய ஷாலினி முஸ்லீம் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், ரியாஸ் அடிக்கடி தன்னிடம் சண்டையிட்டு அடிப்பதாகவும் இனிமேல் இவருடன் வாழ முடியாது விவாகரத்துக்கு விண்ணப்பித்து விவாகரத்தும் செய்தார். இதையடுத்து,இணையத்தில் விவாகரத்து போட்டோஷூட் நடத்தி அலப்பறை செய்தார்.

திணறும் இன்ஸ்டாகிராம்: சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த விஷ்ணுகாந்த், அதே சீரியலில் தன்னுடன் நடித்த சம்யுக்தா என்பவரை காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணமான ஒரே மாதத்தில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். திருமண முறிவுக்கு பின்னர் சம்யுக்தா, விஷ்ணுகாந்த் இருவரும் கடந்த ஒரு மாதமாக ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகின்றனர்.
மணப்பெண் கோலத்தில் குத்தாட்டம்: நடிகை ராக்கி சாவந்த் ஆதில் துரானி என்பவரை காதலித்து கடந்த ஆண்டு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரே ஆண்டுக்குள் கணவர் ஆதில், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது நிர்வாண வீடியோவை நண்பருக்கு விற்றுவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆதில் துரானியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி இருந்த ராக்கி சாவந்த்திற்கு கடந்த மாதம் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. விவாகரத்து கிடைத்த மகிழ்ச்சியில் நடிகை ராக்கி சாவந்த் மணப்பெண் கோலத்தில் ஆட்டம் பாட்டத்துடன் ஆட்டம் போட்டு அலப்பறை செய்தார்.


Click it and Unblock the Notifications











