Cannes 2023 - கேன்ஸ் 2023 - வித்தியாசமான உடையில் ஐஸ்வர்யா ராய்.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
கேன்ஸ்: Cannes 2023 (கேன்ஸ் 2023) கேன்ஸ் திரைப்பட விழாவில் வித்தியாசமான உடையில் ஐஸ்வர்யா ராய் தோன்றிய சூழலில் அவரது உடையை நெட்டிசன்ஸ் சிலர் கலாய்த்துவருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரத்தில் வருடந்தோரும் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறும். 1946ஆம் ஆண்டிலிருந்து நடக்கும் இந்த விழா சினிமா துறையில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவுக்கு அடுத்து பெரிய விழாவாக கருதப்படுகிறது. அந்த வகையில் 76ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. 27ஆம் தேதிவரை கோலாகலமாக நடக்கும் இந்த விழாவில் சர்வதேச திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் கலந்துகொள்வார்கள்.

சிவப்பு கம்பள வரவேற்பு: கேன்ஸ் விழாவில் மற்றொரு சிறப்பு சிவப்பு கம்பள வரவேற்பு. அதில் நடப்பதை பலரும் தங்களது வாழ்நாள் கௌரவமாக கருதுகின்றனர். அதன்படி இந்தியாவிலிருந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன், The Elephant whisperers ஆவண படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கியா, முன்னாள் உலக அழகி மனுஷி சில்லார் நடிகைகள் சாரா அலிகான், இஷா குப்தா, மிருணால் தாக்கூர், அனுஷ்கா ஷர்மா, ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் சிவப்பு கம்பள வரவேற்பை பெற்றனர். அதேபோல் நடிகை குஷ்பூ இந்திய பிரதிநிதியாக இவ்விழாவில் கலந்துகொண்டார். இயக்குநர் விக்னேஷ் சிவனும் இவ்விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்ட மத்திய அமைச்சர்: கேன்ஸ் விழாவில் கலந்துகொண்ட மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன், இந்திய பெவிலியனை தொடங்கி வைத்து கோவாவில் நடைபெறவிருக்கும் 54ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டார். அதுமட்டுமின்றி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் அவர் கலந்துகொண்டது பரவலான வரவேற்பை பெற்றது.
ஐஸ்வர்யா ராயின் என்ட்ரி: வருடா வருடம் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் தவறாமல் கலந்துகொள்பவர்களில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். விழா தொடங்கி இரண்டு நாள்கள் ஆகியும் ஐஸ்வர்யா ராயின் என்ட்ரி கேன்ஸ் திரைப்பட விழாவில் நடக்காமல் இருந்த சூழலில் நேற்று அவர் கலந்துகொண்டார். எப்போதும் வித்தியாசமான உடைகளில் தோன்றும் அவர் இந்த முறையும் அதே பாணியில் தோன்றினார்.

ஐஸ்வர்யா ராயின் உடை: ஐஸ்வர்யா ராய் கறுப்பு மற்றும் சில்வரால் ஆன கவுனை அணிந்திருந்தார். சோஃபி கோட்யூரால் உருவாக்கப்பட்டிருந்த அந்த கவுனில் அலுமினிய பெயில்லெட்டுகள் மற்று கிரிஸ்டல்களால் ஆன கூரை வடிவ ராட்சத சில்வர் ஹூட்டை வைத்து தலையை கவர் செய்யும் வகையில் இருந்தது.
அந்த உடையில் ஐஸ்வர்யா ராயின் என்ட்ரியை பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். அதேசமயம் அவரது உடை நெட்டிசன்கள் மத்தியில் ட்ரோல்களையும் சந்தித்துள்ளது. நெட்டிசன்களில் சிலர் ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்தது உடையா இல்லை கூரையா. அவர் சிம்ப்பிளாக உடை அணிந்தாலே அழகாக இருப்பாரே. பிறகு ஏன் இந்த விபரீத முயற்சி என கலாய்த்துவருகின்றனர்.
பொன்னியின் செல்வன் நந்தினி: ஐஸ்வர்யா ராய் கடைசியாக தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்புக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர். அதேபோல் அஜித் அடுத்ததாக நடிக்கும் விடாமுயற்சி படத்திலும் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைப்பதற்கு லைகா நிறுவனம் தீவிரமாக முயன்று வருவதாக ஒரு தகவல் சில நாள்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











