ஹேப்பி ஆனிவர்சரி... அபிஷேக்குடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா!
ஹேப்பி ஆனிவர்சரி படத்தில் மீண்டும் ஜோடி சேர்கிறார்கள், நிஜ வாழ்க்கை ஜோடியான ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும்.
தமிழில் 'இருவர்' படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், இந்தியத் திரையுலகின் முதல்நிலை நட்சத்திரமாக ஜொலித்தவர்.

திருமணம்
கடந்த 2007-ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், 2011-ம் வருடம் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்ததையடுத்து எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்காமல், தன் குழந்தையை வளர்ப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வந்தார்.

சமூக நல பிரச்சாரங்களில்..
ஆயினும், சில சமூக நலத் தொண்டு நிறுவனங்களின் தூதுவராகவும், எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கான ஐ.நா. கூட்டமைப்பின் நல்லெண்ணத் தூதுவராகவும், பிரான்ஸ் தேசத்தின் கேன்ஸ் திரைப்பட விழாக்களில் இந்தியத் திரையுலகின் பிரதிநிதியாகவும் அவர் பணியாற்றி வந்தார்.

மீண்டும் நடிப்பு
தன்னுடைய மகள் வளர்ந்துவிட்ட சூழ்நிலையில், ஐஸ்வர்யா ராய் மீண்டும் திரையுலகில் நடிக்கத் தயாராகி வருகிறார்.
முதல்கட்டமாக, சில கமர்ஷியல் விளம்பரங்களில் நடித்தார். இப்போது புதிய இந்திப் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஹேப்பி ஆனிவர்சரி
பிரபல இந்திபட இயக்குனர் அட்மன் பிரகலாத் காக்கரின் இயக்கத்தில் உருவாகவுள்ள 'ஹேப்பி அனிவர்சரி' என்ற புதிய படத்தில் அபிஷேக் பச்சனின் ஜோடியாக நடிப்பதற்காக ஐஸ்வர்யா ராயிடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அபிஷேக் பச்சன்
இதுகுறித்து அபிஷேக் பச்சன் கூறுகையில், "இயக்குனர் அட்மன் பிரகலாத் ஐஸ்வர்யாவின் நீண்டகால நண்பர் என்ற வகையில் எனக்கும் அறிமுகமானவர். ரூ.65 கோடி செலவில் 'ஹேப்பி அனிவர்சரி' என்ற பெயரில் புதிய படத்தை இயக்கப் போவதாக அவர் எங்களிடம் கேட்டுள்ளது உண்மைதான்.

நாங்களே அறிவிப்போம்
நாங்கள் அந்த படத்தின் முழு கதையை இன்னும் கேட்கவில்லை. அவுட்லைன் மட்டும்தான் தெரியும். இன்னும் சில விஷயங்கள் இறுதி செய்யப்பட வேண்டியுள்ளதால், இப்போதைக்கு முழுமையாக எதையும் சொல்ல முடியவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்," என்றார்.


Click it and Unblock the Notifications











