விவாகரத்தும் பண்ணல.. வீட்டை விட்டும் போகல.. வதந்திகளுக்கு தரமா பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ராய்!
மும்பை: பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து இந்திய ரசிகர்களையும் கவர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனை பிரிந்து விட்டதாகவும் அமிதாப் பச்சன் வீட்டில் இருந்து வெளியேறி தனது அம்மா வீட்டுக்கே ஐஸ்வர்யா ராய் சென்றதாக சமீபத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், அதெல்லாம் வதந்தி தான் என அறிவிக்கும் அளவுக்கு சூப்பரான சம்பவத்தை செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.
1973ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி கர்நாடகாவில் உள்ள மங்களூரில் பிறந்த ஐஸ்வர்யா ராய். 1994ம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தை வென்றார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் அறிமுகமான அவருக்கு பாலிவுட்டில் பல பட வாய்ப்புகள் குவிந்தன.

அபிஷேக் பச்சன் பிறந்தநாள்: பிரபல பாலிவுட் நடிகர் பிக் பி என அனைவராலும் கொண்டாடப்படும் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மனைவி ஜெயா பச்சனுக்கு மகனாக 1976ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி அபிஷேக் பச்சன் பிறந்தார். அப்பாவை போலவே சினிமாவில் ஆர்வம் கொண்ட அபிஷேக் பச்சன் 2000ம் ஆண்டு வெளியான ரெஃப்யூஜி படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். நேற்று அபிஷேக் பச்சன் தனது 48வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.
கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து: இருவர், ஜீன்ஸ் என தமிழில் ஐஸ்வர்யா ராய் நடித்து வந்த நிலையில், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்த குரு படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். ராவணன், பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 படங்களிலும் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இந்நிலையில், திடீரென மாமியாருக்கும் அவருக்கும் பிரச்சனை வெடித்து விட்டது என்றும் கணவரை பிரிந்து விட்டார் ஐஸ்வர்யா ராய் என்றும் வதந்திகள் கிளம்பின. இந்நிலையில், கணவர் பிறந்தநாளுக்கு அவருடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

கணவரின் சிறு வயது புகைப்படம்: 2007ம் ஆண்டு அமிதாப் பச்சனின் மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ஐஸ்வர்யா ராய். இந்த தம்பதியினருக்கு ஆராத்யா எனும் மகள் உள்ளார். மகளின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கடைசியாக குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஆனால், ஐஸ்வர்யா ராய் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் என பரபரப்பு கிளம்பிய நிலையில், எந்தவொரு மறுப்பும் சொல்லாமல் இருந்து வந்த நிலையில், திடீரென கணவரின் சிறு வயது புகைப்படம் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.
விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி: 50 வயதாகும் ஐஸ்வர்யா ராய் 48 வயதாகும் தனது கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்து விட்டார் என கிளம்பிய வதந்திகளுக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் பதிவிட்டு அபிஷேக் பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஐஸ்வர்யா ராயை போலவே இருக்கும் அவரது மகள் ஆராத்யா விரைவில் சினிமாவில் நடிப்பாரா? என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











